எதிரிகளை வீழ்த்த செம வியூகம்.. சசிகலா தலைமையில் 3ஆவது அணி.. "இவங்கலாம்" இணைய ரெடி?
சென்னை: சசிகலா தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில கட்சிகள் தொகுதி பங்கீட்டுக்கு அழுத்தம் கொடுப்பதும் இதற்காகத்தான் என சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா இருந்த வரை தேர்தல் குறித்த விஷயங்களை அவர்கள் பார்த்து கொண்டார். மேலும் இத்தனை தொகுதி கொடுக்காவிட்டால் நாங்கள் வரமாட்டோம் என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லாமல் இருந்தது.
ஆனால் அவர் இப்போது இல்லாத நிலையால் எல்லாம் தலைகீழாக உள்ளது. ஒருவர் இத்தனை இடங்கள் கொடுத்தால்தான் கூட்டணிக்கு வருவோம் என்கிறார். இன்னொருவரோ எங்கள் ஜாதி ரீதியிலான கோரிக்கைகளை நிறைவேற்றுவோருடன் கூட்டணி என்கிறார்.
இவர்களை எல்லாம் சமாளித்து மேலே வரலாம் என்றால் சசிகலா வேறு சிறையிலிருந்து வந்துவிட்டார். வந்ததும் வராததுமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் சபதமிட்டுள்ளார். அப்படி யாரெல்லாம் அதிமுகவுக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
இடஒதுக்கீடு
முதலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை- இந்த கட்சியின் தலைவர் கருணாஸ். இவர் சார்ந்த ஜாதியினருக்கு நன்மை செய்வதுடன் மக்களுக்கு ஏற்றத்தை தரவும் இவர் அரசியல் கட்சியை தொடங்கியதாக கூறுகிறார். இவர் ஒரு கோரிக்கை முன்னெடுத்து வைத்துள்ளார். ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி சீர்மரபினருக்கு முறையான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என கோருகிறார்.
சின்னம்
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை யார் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளிக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்கிறார். இவர் கடந்த 2016இல் அதிமுக கூட்டணியில் இணைந்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடாணை சட்டசபை தொகுதியில் வென்றார்.
எத்தனை இடம்
அது போல் அடுத்தது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த சரத்குமார் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் அக்கட்சி வெல்லவில்லை.
இரட்டை இலை சின்னம்
தற்போது சரத்குமார் ஓரிரு இடங்கள் எங்களுக்கு தேவையில்லை. கணிசமான இடங்களை கொடுத்தால் கூட்டணிக்கு வருவோம். இல்லாவிட்டால் இல்லை என்கிறார். மேலும் அப்படியே கூட்டணிக்கு வந்தாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்கிறார்.
என்ன நிலை
அதற்கடுத்தபடியாக தேமுதிக- கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி 40 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார் விஜயகாந்த். அதற்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 40 இடங்களை கேட்கிறது. ஆனால் தேமுதிகவுக்கு அவ்வளவு இடங்கள் ஒதுக்க முடியாது என்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு வென்றதோடு சரி, அதன் பிறகு தேமுதிக வெல்லவே இல்லை என்பது அதிமுகவின் எண்ணம். இதனிடையே சசிகலாவுக்கும் பிரேமலதா ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். இதனால் தேமுதிக மீது அதிமுக அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
3ஆவது அணி
இதனால் சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை அது போல் அமைந்தால் அந்த அணியில் தேமுதிக, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இணையும் என தெரிகிறது. சசிகலா தேர்தலில் போட்டியிட சட்டரீதியாக வழிகளை பார்த்து வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எனவே சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமையும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். சசிகலாவின் அணியில் இணையவே இத்தகைய டிமான்ட்களை மேற்கண்ட கட்சிகள் வைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமையுமா என்பதை பார்க்க வேண்டும்.