ஜில் ஜில் சென்னை.. நாளைக்கு எப்படி இருக்கும்? கனமழை பெய்யக்கூடிய ஸ்பாட் எது? தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் நேற்றிலிருந்து இன்று சென்னையில் அப்படியே கிளைமேட் மாறியுள்ளது. ஏதோ ஊட்டிக்கு வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவிற்கு குளிர் காணப்படுகிறது. ஜில் கிளைமேட் நிலவி வரும் நிலையில், சென்னையில் நாளைய நிலவரம் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தூறல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த மழையால் குளிர் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. நாளையும் இதே நிலை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
கடந்த 7 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு அருகே நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து, வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
சென்னையில் ஜில் ஜில் கிளைமேட்
இதன் காரணமாகவும், தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோல் குளிரும் சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
சென்னையில் இன்று, நேற்றில் இருந்து வானிலை நிலவரம் தலை கீழாக மாறியுள்ளது. ஏதோ ஊட்டிக்கு வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவிற்கு குளிர் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான சாரல் மற்றும் ஜில் ஜில் கிளைமேட் நிலவுகிறது. ஃபேன் போடாமல் இருக்க மாட்டேன் என சொல்பவர்களை கூட ஃபேனை ஆஃப் செய்யும் அளவுக்கு குளிர் நிலவி வரும் நிலையில், சென்னையில் நாளைய நிலவரம் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நாளைக்கும் இதே கிளைமேட் தான்
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தூறல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த மழையால் குளிர் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. நாளையும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை அடர்ந்த மேகங்கள் அருகிலேயே உள்ளன. அவை நகர்ந்து உள்ளே வரும் போதும், துறல் பெய்யும். இந்த நிலைதான் நாளை வரையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கு முழு பிரேக்
அதிர்ஷ்டவசமாக டெல்டாவில் கனமழை இல்லை. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. திங்கள் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தின் உள்பகுதிகளிலும் கொங்கு மண்டல பகுதிகளுக்கும் மழை பெய்யும். புதன்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் மழைக்கு முழு பிரேக் ஏற்படும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications