திமுக வேட்பாளர் பட்டியல்... எதிர்ப்பை மீறி உதயநிதிக்கு சீட் கொடுப்பாரா ஸ்டாலின்?
சென்னை : சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ளது. ஆனால் ஆட்சியை பிடிக்க மெகா கூட்டணி அமைத்துள்ள திமுக, இதுவரை எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறது, வேட்பாளர் பட்டியல் என எதையும் வெளியிடாமல், கூட்டணி பேச்சுக்களையே இன்னும் கவனித்து வருகிறது.
அதிமுக இதுவரை 2 வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு, 177 இடங்களில் இரட்டை இலை போட்டியிட உள்ளதை உறுதி செய்து விட்டது. அதிமுக.,வுடன் ஒப்பிடுகையில் திமுக.,வில் மந்த கதியிலேயே ஒவ்வொரு வேலைகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எப்போது வேட்பாளர் பட்டியல்
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக, மக்கள் நீதி மய்யம், பாமக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் வேட்பாளர்களை அறிவித்தன. நாளை வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளதால் இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

உதயநிதிக்காக குவிந்த விருப்பமனுக்கள்
திமுக இளைஞரணி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட, அவர் சார்பில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்திருந்தனர். சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் உதயநிதி போட்டியிட வேண்டும் என விருப்பமனு அளிக்கப்பட்டது. அதே சமயம் உதயநிதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலர் எதிர்ப்பும் கூறி வந்தனர்.

வாரிசுகளுக்கு சீட் இல்லை
2011 முதல் திமுக ஆட்சியில் இல்லாததால், கட்சியின் மூத்த நிர்வாகிகளான எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இந்த முறை தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு விருப்பமனு அளித்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி தலைமை, ஏற்கனவே திமுக என்றால் வாரிசு கட்சி என்ற பெயர் உள்ளதால், அதனை மாற்ற வாரிசுகளுக்கு சீட் கிடையாது என கூறி உள்ளது.

தலைமை மீது அதிருப்தி
மகன் மீதான பாசம் காரணம் ஸ்டாலின் நிச்சயம் உதயநிதிக்கு சீட் தருவார். அதை மற்றவர்கள் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதாலும், அவர்களின் வாரிசுகள் போட்டியாக வந்து விடக்கூடாது என்பதாலும் ஸ்டாலினும், உதயநிதியும் சேர்ந்து நாடகம் ஆடுவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் குற்றம்சாட்டுகின்றனர். தனக்கு சீட் வேண்டாம் என உதயநிதி சொன்னதற்கும் இது தான் காரணம் என கூறப்படுகிறது.

கேள்வி எழுப்பும் நிர்வாகிகள்
சீட் வேண்டாம் என உதயநிதியும், வாரிசுகளுக்கு சீட் இல்லை என ஸ்டாலினும் சொன்னார்கள். அப்படி இருக்கையில் உதயநிதி எதற்காக வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்படியானால் அவருக்கு சீட் கொடுக்க கட்சி தலைமை ஏற்கனவே முடிவு செய்து விட்டதா. யார் எதிர்த்தாலும் தன் மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் தீர்மானித்து விட்டாரா என கட்சி நிர்வாகிகள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தாமதத்திற்கு உதயநிதி தான் காரணமா
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தாமதித்து வருவதற்கு உதயநிதிக்கு சீட் வழங்க கட்சிக்குள் நிலவும் எதிர்ப்பு தான் காரணம் என திமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன. கூட்டணி பேச்சை எளிதாக முடித்த ஸ்டாலினால், கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பையும், வாரிசுகளுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் நிர்வாகிகளை சமாளிக்க முடியவில்லை. இதனால் தான் ஒவ்வொன்றிலும் ஸ்டாலின் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினை எச்சரிக்கும் நிபுணர்கள்
உதயநிதிக்கு சீட் கொடுத்தால் அது திமுக.,வின் வெற்றியை பாதிக்கும் என பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே அறிக்கை அளித்து எச்சரித்துள்ளார். இப்போது வாரிசு அரசியல் என்ற பெயர் நிலைத்து விடும், அதை பிரசாரத்தில் முக்கிய ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க வாய்ப்புள்ளது. இது திமுக.,விற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ஸ்டாலினை எச்சரித்து வருகின்றனர். இதனால் ஸ்டாலின் உச்சகட்ட குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications