"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி!
சென்னை: கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? அல்லது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியா? என்ற கேள்விக்கு தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளின் எண்ணிக்கையையும், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் முடிவு செய்ய உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிடம் 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை மநீம அளித்துள்ள நிலையில் சென்னையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "கூடுதல் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும் தனி சின்னம் குறித்து ஆலோசித்துள்ளோம். தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தயாராக உள்ளோம். திமுகவிடமிருந்து அழைப்பு வந்த பின் ஒப்பந்தம் செய்யப்படும். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications