ரூ.6000 நிவாரண தொகை! ரேஷன் கார்டு இல்லாத வெளி மாவட்ட மக்களுக்கு கிடைக்குமா! தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை: தமிழக அரசு புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத்தை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் அதிகம் தேங்கி மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு ரூ.6000 அறிவித்துள்ளது. இதற்கிடையே ரேஷன் கார்டு இல்லாத வெளியூர்காரர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
தங்கம் தென்னரசு: இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "கடந்தத 2015இல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புடன் ஒப்பிடுகையில் இப்போது பாதிப்பு குறைந்துள்ளது. 2015இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ.10,250 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், இப்போது வெள்ள பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே 5000 கோடி மட்டும் நாம் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
மேலும், இதில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை கூட மத்திய அரசுதான் வழங்குகிறது என சொல்லி வருகிறார் அண்ணாமலை.. வெள்ளம் ஏற்பட்ட போது கமலாலயத்தைப் பூட்டிக்கொண்டு இருந்தவர் எல்லாம் வெள்ளம் வடிந்ததற்குப் பிறகு அறிக்கை விடுகிறார். எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு நீரில் நின்று பேசிவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து நிவாரண நிதியை உயர்த்த வேண்டும் என அறிக்கை வெளியிடுகிறார்.
அண்ணாமலை: அண்ணாமலை தமிழ்நாட்டிற்காக மத்திய அரசிடம் பேசி நிவாரண நிதியை வாங்கி தர வேண்டும். ஜி.எஸ்.டி நிலுவை தொகை விவகாரத்திலேயே மத்திய அரசிடம் போராடி வருகிறோம். மகாராஷ்டிரா, உபி, கர்நாடகா மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நாம் வஞ்சிக்கப்படுகிறோம். நாம் தரும் ஒரு ரூபாயில் மத்திய அரசு நமக்கு 29 காசுகள்தான் திரும்ப தருகிறது.
இந்த வெள்ளத்தால் முதற்கட்டமாக சுமார் ரூ. 5000 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கீடு செய்துள்ளோம். நாளைய தினம் மத்திய அரசின் குழு தமிழ்நாட்டிற்கு வருகிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட உள்ளனர். அதன் பிறகு நாமும் இறுதி மதிப்பீடு செய்து நாம் மீண்டும் கோரிக்கை விடுப்போம்.
உயிரிழப்புகள் குறைவு: இந்த புயல் காரணாமக உயிரிழப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள என்றாலும் கூட அது பெரியளவில் இல்லை. 10க்கும் குறைவான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். உயிரிழப்புகள் தகவல்களை மறைக்கவோ குறைத்து காட்டவோ நாங்கள் முயலவில்லை.
யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவிகள் உடனுக்கு உடன் வழங்கப்பட்டுள்ளன.. சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தொகை வழங்கப்படும். வரும் டிச.16ஆம் தேதி முதல் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகு 10 நாட்களில் இதற்கான பணிகள் முடிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட வட்டங்களில் இருக்கும் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும். திருவள்ளூரை எடுத்துக் கொண்டால் பள்ளிப்பட்டு மற்றும் அதை தாண்டி இருக்கும் பகுதிகளில் பெரியளவில் பாதிப்புகள் இல்லை. இப்படி தலூகா வாரியாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும். சென்னையில் அனைத்து வட்டங்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்.
ரேஷன் கார்டுகள் இல்லை என்றால் கிடைக்குமா: நிவாரணம் என்பது ஒரு ரெபரன்ஸ் லைனை வைத்து தான் தர முடியும். இன்று நாம் அதற்கு ரேஷன் கார்டுகளை வைத்துள்ளோம்.. இதனால் பாதிக்கப்படுவோர் அரசிடம் முறையீடு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பெய்தது. இதன் காரணமாகவே அப்போது எதையும் செய்ய முடியவில்லை. எப்போதும் புயல் என்பது அடித்து ஒய்ந்துவிடும். ஆனால், இந்த புயல் மிக மெதுவாக நகர்ந்து இரண்டு நாட்கள் தொடர் மழையை கொடுத்தது. யாரும் எங்கும் போக முடியாத நிலை ஏற்பட்டது. மழை நின்றவுடன் மிக வேகமாக நிவாரண பணிகள் தொடங்கியது" என்றார்.












Click it and Unblock the Notifications