வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலால் காவு வாங்கப்பட இருக்கும் பிற சொகுசு ரயில்கள்.. அதிகாரிகள் சொல்வது என்ன
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் சொகுசு ரயில்களான ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறிய தகவல் பற்றி இங்கே பார்க்கலாம்.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயண நேரம் குறைவு, முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகளை கவரும் விதமாக இந்த ரயில் சேவை இருப்பதால் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.

தற்போது வந்தே பாரத் ரயில்ககள் இருக்கை வசதி கொண்டவையாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தொலை தூரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
இரவு நேர பயணங்களில் இந்த ரயில்கள் அதிகம் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்கள் முழு வீச்சில் ரெடியாகி வருகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை என்பதால் பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும்.
இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களின் சேவை பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் வட்டார தரப்பில் கூறுகையில், "சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக வந்தே பாரத் ரயில்களாக மாற்றப்படும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தற்போது இயங்கும் ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாக இருக்கும். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும்.
பிரீமியம் ரயில்களாக இயக்கப்படும் இந்த ரயில் டெல்லி உள்பட பல்வேறு மாநில தலைநகர்களை இணைக்கும் வகையில் இயங்கி வருகின்றன. அண்மையில், ஐசிஎப் பொதுமேலாளர் அளித்த பேட்டி ஒன்றில், "பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலின் நேரமும் சதாப்தி ரயிலின் நேரமும் நெருக்கமாக உள்ளன. எனவே, வரும் காலத்தில் சதாப்தி ரயில்களுக்கு பதிலாக வந்தே பாரத் ரயில்கள் மட்டும் இயக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.
தேவைக்கேற்ப வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் சதாப்தி ரயில்கள் வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்" என்றார். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படும். சதாப்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது.












Click it and Unblock the Notifications