ஓபிஎஸ் அணி மாநாட்டில் கலந்து கொள்வீர்களா..வந்து விழுந்த கேள்வி.. டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: திருச்சியில் வரும் 24 ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் அணி தரப்பில் மாபெரும் முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் வரும் 24 ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் அணி தரப்பில் மாபெரும் முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்திய சட்டப்போராட்டத்தில் பின்னடைவை சந்தித்து வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி சார்பில் நடபெறும் திருச்சி மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
திருச்சி மாநாட்டில் பங்கேற்பேனா? சசிகலாவை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்து வரும் ஓ பன்னீர் செல்வம் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார். மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், "முப்பெரும் விழாவிற்கு கட்சியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அவர்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றவர்களை முறைப்படி அழைப்போம். இதுகுறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும். விழாவில் அனைவரும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "தொலைக்காட்சியில் அந்த செய்தியை நான் பார்த்தேன். நீங்கள் ( செய்தியாளர்கள்) கேட்டீர்கள்.. அவர் பதில் சொல்கிறார். இன்னும் எவ்வளவோ நாள் இருக்கு.. இன்றைக்கு 10 ஆம் தேதிதான். இன்னும் 13, 14 நாள் இருக்கு.. பார்க்கலாம். அழைப்பு வந்தால் உங்கள் முடிவு என்ன என்று கேட்கிறீர்கள்... யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம்.. அந்த நேரத்தில் தெரிய வரும்" என்றார்.
ஓபிஎஸ் ஈபிஎஸ்சை மோடி சந்திக்காதது குறித்து: தொடர்ந்து டிடிவி தினகரன் கூறுகையில், "தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசும் மாநில அரசும் அமல்படுத்தக் கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மத்திய அரசு டெல்டா பகுதிகளில் நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நமது டெல்டா பகுதி காவிரி படுகை பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. விவசாயத்தை பாதிக்காத தொழில்கள்தான் இங்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். அதுதான் அமமுகவின் நிலைப்பாடும் கூட. நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயிகள் மற்றும் மக்களுடன் சேர்ந்து அமமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்" என்றார்.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் - இபிஎஸ் என இருவரையும் பார்க்காமல் சென்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், "அது அவர்களின் கூட்டணி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து சொல்வது நன்றாக இருக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications