ராஜ்யசபா சீட்டு கைக்கு வருமா? அன்புமணி கனவு பலிக்குமா? பலம் இழந்து வரும் பாஜக?
சென்னை: ராஜ்ய சபாவில் பாஜகவின் பலம் குறைந்து வருவதால்,பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை சீட்டுக் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. பாஜக கூட்டணியால் அக்கட்சி விக்கிரவாண்டி வெற்றியையும் இழந்துள்ளது.
இந்தியா முழுக்க 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. இதில் 2 தொகுதிகளில்தான் பாஜக வெற்றி பெற்றது. இதனால், ராஜ்ய சபாவில் பாஜகவின் பலம் குறைந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பல மாநிலக் கட்சிகள் ராஜ்ய சபா சீட்டு பெற்றுவிடலாம் என்று நம்பி இருந்தன. அப்படித்தான் தமிழ்நாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா சீட்டு பெற்று விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால், இப்போது நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வி அடைந்துள்ள நிலையில், இப்போது பாஜகவிடம் ராஜ்ய சபா சீட்டு கேட்டுப் பெற முடியுமா என்ற நிலை மற்றொரு பக்கம் உருவாகியுள்ளது. விக்கிரவாண்டியில் அதிமுகவின் ஓட்டுக்களை தன் பக்கம் இழுப்பதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பி இருந்த பாமகவுக்கு தேர்தல் முடிவு புதிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. அதிமுக தேர்தலைப் புறக்கணித்த நிலையில், அந்த ஓட்டுகள் அப்படியே திமுக பக்கம் போய் உள்ளன. அதற்குக் காரணம், ஆளும் கட்சியாக திமுக உள்ளதால் சில ஆதாயங்களைத் தொகுதிக்குப் பெற முடியும் என்று நினைத்து வாக்காளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதிமுகவின் ஓட்டுக்கள் எதிரி கட்சியான திமுக பக்கம் போனது பற்றி பலரும் வியப்பை முன்வைத்து விவாதித்து வருகின்ற நிலையில், பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அது வியப்பு இல்லை என்கிறார். இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்காகப் பேச்சு வார்த்தை நடந்தது. அதற்கான முயற்சியை எடுத்தவர் ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக்.
எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் பத்திரிகையாளர்களை இதற்காகச் சந்தித்து விளக்கினர். முதல்வராக யார் இருப்பார் என்ற கேள்விக்குக் கருணாநிதி, 'எம்.ஜி.ஆரே இருப்பார்' என்று விட்டுக் கொடுத்தார். கட்சியின் தலைவராக அவரே நீடிப்பார் என விளக்கம் அளித்தார். ஆகவே, திமுகவும் அதிமுகவும் இணையே முடியாத எதிரிகள் அல்ல" என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், "பாஜக மோடி தலைமையில் முதன்முதலாக 2014 இல் போட்டியிட்ட போது தமிழ்நாட்டில் அந்தக் கூட்டணி 18% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல இப்போது 2024 பாஜக கூட்டணி 18% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், 2014 பாஜக கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் அன்புமணி என 2 எம்பிகள் பாஜகவுக்குக் கிடைத்தனர்.
இந்தமுறையும் அதே வாக்கு சதவீதம்தான். இருந்தாலும் ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை. 2014 கூட்டணிக்குள் பாஜக இருந்தது. 2024 பாஜகதான் கூட்டணிக்கே தலைமை. அப்படி இருந்ததும் ஒரு சீட்டும் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? கட்சி வளர்ந்துள்ளதா? இல்லையா? என்று கேள்வி வருகிறதா ? இல்லையா? இந்தக் கேள்விக்குப் பதில் உள்ளதா?
2014 தர்மபுரியில் அன்புமணி நின்றார். அவர் செல்வாக்கு மிக்க வேட்பாளர். இந்த முறை அவரது மனைவி சௌமியா அன்புமணி நின்றார். இவருக்கும் நட்சத்திர வேட்பாளர்தான். கன்னியாகுமரியில் இரண்டு முறையும் பொன் ராதாகிருஷ்ணன் தான் நின்றிருக்கிறார். அப்படி இருந்தும் பாஜக கூட்டணி ஏன் வெற்றி பெறவில்லை?
பொதுவாக பாஜகவுக்கு எதிரான மனநிலை 2024 மக்களவைத் தேர்தலில் நிலவியது. அதைப் புரிந்து கொண்டுதான் அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்தது. 2019 அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. அதை மக்கள் ஏற்கவில்லை. அதனால்தான் 22 தொகுதிகளில் இடைத்தேர்தலில் அதிமுக பாமகவைக் கூட வைத்துக் கொண்டது. பாஜகவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்கூட அதிமுக போன பாமகவை வைத்துக் கொண்டது. பாஜகவை கழற்றிவிட்டுவிட்டது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஜெயலலிதா காலத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதை ஜெயலலிதாவே புறக்கணித்துவிட்டார். அதை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டதே தவறு. அதையேதான் பாமக இப்போது செய்துள்ளது. அதிமுக ஓட்டுகள் திமுகவுக்கு ஏன் சென்றது என்றால், பாமக கூட்டணியில் பாஜக இருந்ததால்தான். அது இல்லை என்றால் பாமக கூடுதலாக ஓட்டுகளைப் பெற்றிருக்கும்.
இந்தியா முழுக்க 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்ததுள்ளது. அதில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 2 பாஜக வென்றுள்ளது. பாஜகவைவிட இந்தியா கூட்டணி அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. முதன்முறையாக பாஜக ராஜ்ய சபாவில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இனிமேல் அவையில் கூட்டணிக் கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜக எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாது.
முன்பே மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை. இப்போது ராஜ்ய சபாவிலும் அந்தக் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஜனசேனா, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் என பல கட்சிகளின் உதவியை பாஜக நாடவேண்டி வரும். பழைய மாதிரி தடாலடியாக மசோதா நிறைவேறாது" என்கிறார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராஜ்ய சபா சீட்டு பெற்று எம்பி ஆகிவிடலாம் என மாநிலக் கட்சிகள் கனவு கண்டுகொண்டிருந்தன. தமிழ்நாட்டில் அன்புமணி கூட ராஜ்ய சபா சீட்டு மீது கண் வைத்திருந்தார். ஆனால், இப்போது பாஜக மாநிலங்களவையிலேயே ஆட்டம் கண்டுள்ளது. அப்படிப் பார்த்தால் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டுக் கொடுக்க முடியுமா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications