தனி விமானத்தில் ஊழியர்களை அழைத்து வந்த விப்ரோ - வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு மீட்குமா
அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், மலே
சென்னை: அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் விசா பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களை விப்ரோ நிறுவனம் மீட்டு அழைத்து வர உள்ளது. இதேபோல சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாடுகளில், வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, மத்திய அரசு வந்தே பாரத் எனும் திட்டத்தைக் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும், இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் ஒரு லட்சம் பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூலை 16 ஆம் தேதி வரை 34,362 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். விமான டிக்கெட் பதிவு செய்துவிட்டு இன்னும் 22.320 பேர் காத்திருக்கின்றனர்.
இந்தியா வருவதற்கு தாங்கள் வழக்கமாகச் செலுத்தும் தொகையைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து அதிக பணம் செலவு செய்து பலரும் தாய்நாடு திரும்புக்கின்றனர். இந்த நிலையில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தனி விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அழைந்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்களது ஊழியர்களை இந்தியா அழைத்து வந்தன. அதைத் தொடர்ந்து தற்போது விப்ரோ நிறுவனமும் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அமெரிக்காவில் நிலை என்ன
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒன்றரை கோடி மக்களை பாதித்துள்ளது. வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக அங்கு வெளிநாட்டினர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் அமெரிக்க அரசு சமீபத்தில் விசா கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தியா திரும்பும் ஐடி பணியாளர்கள்
இந்த ஆண்டு இறுதி வரையில் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களைத் தடை செய்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. விசாவுக்கான காலக்கெடு முடிந்த நிலையிலும் விரைவில் முடிவடையும் நிலையிலும் உள்ள ஐடி பணியாளர்கள் இந்தியாவுக்கு எப்படி வருவது என்று தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
விப்ரோ பணியாளர்கள்
இந்த நிலையில் விப்ரோ நிறுவனம் தனது சொந்த முயற்சியில் தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களுக்காக வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அழைத்து வருகின்றனர். விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 500 பேர் நியூயார்க் நகரத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தனர்.
விசா பிரச்சினை
அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் விசா பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களை விப்ரோ நிறுவனம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் தலைவரும் மனிதவள மேலாண்மைப் பிரிவு தலைவருமான சவுரப் கோவில் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு தனி விமானம்
ஊழியர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் அவர்களின் நலனுக்கு விப்ரோ நிறுவனத்தில் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம் எனவும், அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அரசு நடவடிக்கை எடுக்குமா
இதனிடையே குவைத், துபாய், சிங்கப்பூர், மலேசியா என உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். அரேபிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையிழப்பால் கையில் பணமின்றி, உணவும் கிடைக்காமல் தங்குவதற்கு இடமில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் பல தமிழகர்கள், அவர்களுக்கு அங்கிருக்கும் தமிழ் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்களின் உதவியோடு உயிர் பிழைத்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.