புரட்டாசி முடிந்ததும்! காசிமேடு மீன் மார்க்கெட்டில் வஞ்சிரத்தை வாஞ்சையோடு எடுக்கும் மக்கள்!
சென்னை: புரட்டாசி மாதம் நேற்று முன் தினம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே மீன் வாங்க கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக டல்லடித்த வியாபாரம் இன்று காலை முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதம் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சிலர் முதல் சனிக்கிழமையே படையலை போட்டுவிட்டு அசைவம் சாப்பிட தொடங்குவார்கள்.

அந்த வகையில் புரட்டாசி மாதம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறந்தது. இது கடந்த 17-ஆம் தேதி முடிந்தது. நேற்று 18ஆம் தேதி முதல் ஐப்பசி 1ம் தேதி பிறந்தது. இந்த முதல் நாள் சனிக்கிழமை என்பதால் பலர் அசைவம் சாப்பிடவில்லை.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை பிறந்ததும் காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன் வாங்க அதிகாலை முதலே கூட்டம் குவிந்தது. குறைந்தளவு விசைப்படகுகளே கரைக்கு திரும்பியதால் மீன் வரத்தும் குறைவாகே இருந்தது. விலையும் சராசரியாக இருந்தது.
வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை மீன், பாறை, சீலா, சங்கரா உள்ளிட்ட மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அது போல் கடலூர் துறைமுகத்திலும் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாளை மாலை அமாவாசை விரதமும் தொடங்கப்படுவதால் இன்றே மீன் கடைகளிலும் இறைச்சி கடைகளிலும் மக்கள் குவிந்துள்ளனர்.
ஆட்டுக் கறி கிலோ 1000 ரூபாய்க்கும் கோழி கறி ரூ 280-க்கும் விற்பனையாகிறது. அது போல் வஞ்சிரம் மீன் 800 ரூபாய், வவ்வால் ரூ 600, சங்கரா ரூ 300, இறால் ரூ 300, நண்டு ரூ 400க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications