பெண் கண்டக்டர் கிட்ட வேகமாக நெருங்கிய ஆண் பயணி.. அரசு பஸ்ஸில் யாருமே எதிர்பார்க்கல.. ஆடிப்போன மக்கள்
சென்னை: அரசு பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை கடந்த 2 நாட்களாகவே தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வரும் நிலையில், வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை தந்துள்ளது.
கதக் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடி அருகே சிலர் பஸ்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்... ஆனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ்கள் எதுவுமே வராததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்..

அந்த வழியாக சில சூப்பர் ஃபாஸ்ட் பஸ்கள், நிற்காமல் டோல் கேட்டை கடந்து சென்றன. பிறகு அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து சுங்கச் சாவடியில் மெதுவாக நின்று கிளம்பியது. இதனால் பயணிகள் வேறு வழியின்றி அந்த பஸ்ஸை இடைமறித்து நிறுத்தினார்கள்..
கண்ட இடத்தில் நிறுத்த முடியாது
இதை பார்த்த டிரைவர் கடுப்பாகி ஏன் பஸ்ஸை நிறுத்தினீர்கள்? என்று பயணிகளிடம் சத்தம் போட்டார்.. அதற்கு பயணிகளில் ஒருவர், பஸ்ஸில் இவ்வளவு இடம் இருக்கே? எங்களை ஏற்றி கொண்டு போனால் என்ன? ஏன் ஏற்றவில்லை? என்று கேள்வி எழுப்பினார்..
அதற்கு பஸ்ஸில் இருந்த பெண் கண்டக்டர், கண்ட இடங்களில் எல்லாம் பஸ்ஸை நிறுத்த முடியாது என கோபமாக சொன்னார்..
பெண் கண்டக்டர்
ஆனாலும் அந்த பயணி, அதை காதில் வாங்கி கொள்ளாமல், பஸ்ஸில் ஏறி, பெண் கண்டக்டரை தள்ளிவிட்டு அவருடை சீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்..
இதைப்பார்த்த மற்ற பயணிகளும் பஸ்ஸூக்குள் ஏற முற்பட்டனர்.. அவர்களை தடுத்து நிறுத்திய பெண் கண்டக்டர், எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார்.. அப்போது கீழே நின்றிருந்த ஒருவர், அங்கிருந்த அனைவரையும் விலக்கிவிட்டு பஸ்ஸில் ஏறி, பெண் கண்டக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்..
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்டக்டர் அலறி கூச்சலிட்டார். பிறகு தன்னை தாக்கிய நபரை பதிலுக்கு தாக்கினார்.. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது...
வேடிக்கை பார்த்த பயணிகள்
இதையெல்லாம் பஸ்ஸில் இருந்தவர்களும், பஸ்ஸில் ஏறுவதற்காக கீழே காத்து கொண்டிருந்த பயணிகளும் தலையிடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு நின்றுள்ளார்கள்.. கைகலப்பு அதிகமாகவும்தான், அங்கிருந்த சில பெண்கள் முன்வந்து இருதரப்பையும் சமாதானம் செய்திருக்கிறார்கள்..
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பணியில் இருந்த பெண் கண்டக்டரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்..
ஒருசிலர் ஆண் பயணிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. பயணிகளை கீழ்த்தரமாக நடத்தும் இதுபோன்ற கண்டக்டர்களுக்கு இது தேவைதான் என்கிறார்கள்.. ஆனால் மேலும் சிலர், என்ன இருந்தாலும் பணியில் உள்ள அரசு ஊழியரை, அதுவும் பெண்ணை இப்படி அடித்திருக்க கூடாது என்றும் சொல்லி வருகிறார்கள்..
டிரைவரின் கன்னத்தில் பளார்
சமீபத்தில்தான் இதே போன்ற ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்தது.. அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது... பயணத்தின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையே வாக்குவாதம் தீவிரமடைந்தது.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டிரைவரை அந்த பெண் பயணி அடித்துவிட்டார்.. இதனால் இரு தரப்பிலுமே கைகலப்பு நடந்தது.. பெண் பயணியுடன் மோதலில் ஈடுபட்ட டிரைவரின் பெயர் ரவி என்பதும், டிரைவர் மீதுதான் தவறு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது..
தாறுமாறாக பஸ் ஓட்டிய டிரைவர்
பெண் பயணியுடன் ஏற்பட்ட மோதலில், பஸ்ஸை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதாகவும், தேவையில்லாமல் திடீர் பிரேக் போட்டதாகவும், இதனால் சில பயணிகள் காயம் அடைந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், டிரைவருக்கும், அந்த பெண் பயணிக்கும் இடையே என்ன பிரச்சனை? எதற்காக மோதல் என்பது தெரியவில்லை..
டிரைவரை பெண் பயணி தாக்கியது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்திருந்தது.. இப்போது பெண் கண்டக்டரின் கன்னத்தில் அறைந்த சம்பவமும் பரபரப்பை தந்து வருகிறது.. இதையடுத்து, அரசு பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications