“பெண்களை அடுப்படியில் இருக்க சொன்னா அது வடஇந்தியா.. 'முன்னேறுங்க' என்றால் தமிழ்நாடு” - தயாநிதி மாறன்
சென்னை: "வட இந்தியாவில் பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் அடுப்படியில் இரு, குழந்தைகளை பெற்றுக்கொள், இது தான் உங்கள் வேலை என சொல்கிறார்கள். ஆனால், இது தமிழ்நாடு. இங்கு பெண்களை முன்னேறுங்கள் என்கிறோம். பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றம்" என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
சென்னையில் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப்களை வழங்கினார். சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் 898 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், மாநகராட்சி கவுன்சிலர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், "நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடும், இந்திய மாநிலங்களில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலினும் திகழ்கிறார்கள். நமது மாநிலத்தில் திராவிட சிந்தனையைத் தீப்பொறியாக ஏற்றியவர் பெரியார் தான். பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.
எங்கள் மாநில மாணவிகள் பெருமைப்பட வேண்டும். அவர்களைப் பற்றி நாங்களும் பெருமைப்படுகிறோம். அதனால் தான் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வட இந்தியாவில் பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் அடுப்படியில் இரு, குழந்தைகளை பெற்றுக்கொள். இது தான் உங்கள் வேலை என சொல்கிறார்கள். ஆனால், இது தமிழ்நாடு. இங்கு பெண்களை முன்னேறுங்கள் என்கிறோம். பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications