இனி யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு பறக்கலாம்! விண்வெளி சுற்றுலாவில் புதிய சாதனை! ப்ளாஷ் பேக் 2023
சென்னை: விண்வெளி துறையை பொறுத்த அளவில் 2023 மிக முக்கியமான ஆண்டு. சந்திரயான், பென்னு, ஆதித்யா எல்1 என பல்வேறு சாதனைகள் ஒருபுறம் படைக்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் விண்வெளி சுற்றுலாவில் மனித குலம் புதிய புரட்சியை செய்திருக்கிறது.
மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடங்கிவிட்டது. குரங்கிலிருந்து மனிதனாக நாம் பரிணமித்தபோது குகைகளில் வாழ்ந்து வந்தோம். அந்த குகைகள் இன்னமும் இருக்கின்றன. அதில் ஏராளமான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறோம். இந்த ஓவியங்களில் ஆடு, மாடு ஆகியவற்றோடு சேர்த்து நட்சத்திரங்களையும், நிலவையும் கூட வரைந்து வைத்திருக்கிறோம். இப்படியாக விண்வெளி மீதான ஆர்வம் நாம் மனிதனாக மாற தொடங்கியபோதே நம்முடன் சேர்ந்து பிறந்துவிட்டது.

அதன் பின்னர் வேளாண் சமூகமாக நாம் வளர்ந்தபோது, விண்வெளி குறித்து இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள விரும்பினோம். நிலவின் சுழற்சியை புரிந்துக்கொண்டு, அதிலிருந்து மாதம் எனும் கணக்கை உருவாக்கினோம். இதை லூனார் காலண்டர் என்று சொல்வார்கள். அதாவது, ஒரு அமாவாசைக்கும், அடுத்த அமாவாசைக்கும் இடையே இருக்கும் 30 நாட்களை ஒரு மாதமாக கணக்கிட்டோம். அதேபோல சூரிய உதயத்தை வைத்து கடக சங்கராந்தி, மகர சங்கராந்தி என்று காலங்களை பிரித்து புதிய ஆண்டின் தொடக்கத்தை கணக்கீடு செய்தோம்.
இப்படி இருக்கையில் கடந்த நூற்றாண்டில் உருவான அற்புதமான கண்டுபிடிப்புகள் நிலவை தொடும் அளவுக்கு மனித சமூகத்தை உயர்த்தி இருக்கிறது. மனிதர்கள் நிலவில் இறங்கி அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவந்தனர். அதன் பின்னர் சூரிய குடும்பத்தில் உள்ள சில கோள்களில் விண்கலனை இறக்கி சாதனை படைத்துள்ளனர். இப்போது விண்வெளி துறையை இந்த 2023ம் ஆண்டில் மேலும் ஓரடி முன்னோக்கி நகர்த்தியிருக்கின்றனர். அதாவது இனி விண்வெளிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம் என்கிற நிலையை மனிதர்களாகிய நாம் உருவாக்கியுள்ளோம்.
அதாவது கடந்த ஜூன் மாதம் 29ம் தேதியன்று விர்ஜின் கேலக்டிக் எனும் விண்வெளி சுற்றுலா நிறுவனம், முதல் முறையாக 4 விஞ்ஞானிகள் உட்பட 6 பேரை விண்வெளிக்கு அழைத்து சென்று பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 75 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரை விண்வெளியில் இந்த 6 பேரும் பறந்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து சென்று பத்திரமாக திரும்பியிருக்கிறது. இதன் மூலம், பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டும்தான் விண்வெளிக்கு போக வேண்டும் என்று கிடையாது, யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு சென்று திரும்பலாம் என்பதை இந்த இரண்டு நிறுவனங்களும் நிரூபித்திருக்கின்றன. ஆனால் இதற்கான விலைதான் சற்று அதிகம். 70 நிமிடங்கள் வரை விண்வெளியில் இருக்க ரூ.3.7 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் இப்போதே டிக்கெட் புக் செய்து காத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் வானத்தை பார்த்தது பிரமாண்டமாக இருக்கிறது என்று கருதிய மனிதன், தற்போது 'இதெல்லாம் சும்மா சாதாரணம்' என கருதும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்து இருக்கிறான். அதற்கு இந்த விண்வெளி சுற்றுலா துறை மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த 2023ம் ஆண்டு என்பது விண்வெளித்துறைக்கும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஸ்பெஷல்தான்.












Click it and Unblock the Notifications