பாமகவினரால் கடத்தப்பட்ட இளமதி எங்கே... உயிருடன் இருக்கிறாரா.. மீட்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை
பாமகவினரால் கடத்தப்பட்ட பெண் எங்கே என திருமா கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "சாதி மறுப்பு திருமணம் செய்ததால், பாமகவினரால் கடத்தப்பட்ட இளமதி எங்கே... மணமகளை மீட்க காவல்துறை அக்கறை காட்டாமல் உள்ளது... சாதிவெறியர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.. இளமதி உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை... முதலமைச்சர் இதில் தலையிட்டு இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. இருவரும் வேறு வேறு சாதி!
செல்வன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.. அதனால் அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார்.இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 2 நாளைக்கு முன்பு கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
கடத்தல்
பிறகு செல்வனும் இளமதியும் அன்றைய தினம் நண்பரை சந்திப்பதற்காக பைக்கில் கிளம்பி சென்றனர்.. அப்போது, 4 ஆம்னி கார், ஒரு பொலேரோ, ஒரு இன்டிகா உட்பட 10-க்கும் மேற்பட்ட பைக்குகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் அழைத்து செல்லும்போது, செல்வனும் இளமதியும் எங்கே என கேட்டு.. செல்போனை பிடுங்கி... கடுமையாக தாக்கி உள்ளனர்.
பாமக
இதனிடையே கொளத்தூர் அருகே உள்ள உக்கம்பருத்திக்காடு என்ற பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமண தம்பதியை பாமக மற்றும் கொங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து அவர்களை தாக்கி இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டது.. இதில், இளமதியின் தந்தை பாமகவை சேர்ந்தவராம். இந்த விஷயம் தீயாக பரவி, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் திவிகவினர் முற்றுகையிட்டு மணமக்களை உடனடியாக மீ்ட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென அன்றைய தினமே விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இளமதி
இளமதியும் செல்வனும் வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதால், கலப்புத் திருமணத்தை ஏற்கமுடியாமல் அவர்களை பிரிப்பதற்காக இளமதியின் தந்தையே இப்படி கடத்தி கொண்டு போனதும் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் ஈஸ்வரனையும் செல்வனையும் போலீசார் மீட்டனர்... ஆனால் இளமதியை மட்டும் இன்னும் மீட்கவில்லை.. அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
திருமாவளவன்
இந்நிலையில், இளமதியை மீட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவனும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் 'சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக பாமகவினரால் கடத்தப்பட்ட இளமதியை உடனே மீட்டுத்தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இச்சம்பவத்தில் காவல்துறை 18 பேரை கைது செய்துள்ளது.. ஆனால் மணமகளை மீட்க அக்கறை காட்டாமல் உள்ளது. சாதிவெறியர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.. அவர் உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
இளமதி எங்கே?
இதற்கு அமைச்சர் ஒருவரின் தலையீடே காரணம் என தெரிகிறது.. அதனால் முதலமைச்சர் அவர்கள் நேரடியாக இதில் தலையிட்டு இளமதியை மீட்கவும், மணமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.. கடத்தியவர்களுக்கு துணைபோகும் அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டு கொள்கிறாம்.. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிவெறி குற்றங்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆணவ கொலைகளுக்கு எதிரான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.