தவெக விஜய் மாநாட்டுக்கு சென்றவர் மாயம்.. 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு! என்ன நடந்தது?
சென்னை: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குச் சென்ற இளைஞர், 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வேலூரில் இருந்து மதுரைக்கு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். பின்னர் மாநாடு முடிந்து திரும்பி வரும்போது நள்ளிரவில் திருச்சி அருகே அனைவரும் ஹோட்டலில் உணவருந்தச் சென்றனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய மதன், வெகுநேரம் ஆகியும் காணவில்லை. இதனால் நண்பர்கள் அவரைத் தேடிப் பார்த்துவிட்டு மீண்டும் வேலூர் வந்துள்ளனர். எப்படியும், வேலூருக்கு வந்துவிடுவார் என நினைத்துள்ளனர். ஆனால், அவர் அங்கு வராத நிலையில், அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். மதனை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பின்னர், மதனை காணவில்லை என வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு அவரது நண்பர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் கடந்த 22 ஆம் தேதி விபத்தில் பலியான நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு சென்ற மதனின் உறவினர்கள் இறந்தது மதன் என அடையாளம் கண்டனர். இன்று அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரோதப் பரிசோதனை முடிந்து மதனின் உடலை வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யின் தவெக மாநாட்டிற்கு சென்ற வேலூர் இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மாநாட்டுக்கு சென்றவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications