மருத்துவரை வெட்டிட்டு போனான்.. எல்லாரும் ஒதுங்கிட்டாங்க.. நேரில் பார்த்தவர்கள் சொன்ன திக் திக் தகவல்
சென்னை: "ஓடி வாங்க.. ஓடி வாங்க என்று சத்தம் கேட்டது.. திரும்பி பார்த்தால் ஒரு பையன் கத்தியோடு ஓடி வந்தான்.. டாக்டரை அவன் குத்தியிருப்பதை பார்த்தோம். அந்த பையனின் கையில் கத்தி இருந்ததால் யாரும் அவனை பிடிக்க முடியவில்லை" என்று சென்னை கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் கூறினர்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்தியதை நேரில் பார்த்த நோயாளிகள் சிலர் இது குறித்து கூறினர். அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் சிகிச்சைக்காக வந்திருந்தோம்.. திடீரென ஒரே பரபரப்பாக இருந்தது. ஓடிவாங்க... ஓடி வாங்க என்று சத்தம் கேட்டது. எதுக்கு என்றே எங்களுக்கு தெரியாது. என்னவென்று பார்த்தால் அங்கே ஒரு மருத்துவரை கத்தியால் குத்தியிருப்பதை பார்த்தோம். குத்தியவன் கையில் கூர்மையான கத்தி இருந்ததால், யாருமே பிடிக்க முடியவில்லை.
எல்லாரும் ஒதுங்கி தான் நின்னார்கள். அந்த பையன் எதனால் அப்படி பண்ணினான் என்று தெரியவில்லை. டாக்டர் என்ன செய்தார்.. இந்த பையன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. இரண்டு பேரிடமே நன்கு விசாரித்துதான் இந்த முடிவு எடுக்க வேண்டும். செக்யூரிட்டிகள் உடனே வந்தார்கள். எனினும் யாரும் அவரை பிடிக்கவில்லை. என்று கூறினர்.
மேலும் சிலர், "அந்த பையன் வெளியே நடந்து கொண்டிருந்தான். பலரும் செல்போனில் வீடியோ எடுத்த படியே பின்னாலேயே சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு தான் எல்லா செக்யூரிட்டிகளும் சேர்ந்து அவனை பிடித்து வைத்தனர். கத்தியை முதலில் அவனது பாக்கெட்டில் வைத்திருந்தான். பிறகு அங்குள்ள ஜன்னலில் வைத்தது போல் தெரிந்தது" என்று மருத்துவமனைக்கு நோயாளியுடன் வந்தவர்கள் சிலர் கூறினர்.
மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு விக்னேஷ்வரன் தப்பி செல்ல முயன்ற போது மருத்துவமனை காவலாளிகளும் அங்கு பணியில் இருந்தவர்களும் மடக்கி பிடித்தனர். அப்போது ஆக்ரோஷமாக அந்த இளைஞர் சத்தமும் போட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை இன்று வழக்கமான பரபரப்புடன் செயல்பட்டு வந்தது. நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து இருந்தனர். மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, மருத்துவமனையின் புற்று நோய் பிரிவின் சிறப்பு மருத்துவரான பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் திடீரென தாக்கினார்.
மருத்துவரை கத்தியால் வெட்டியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மருத்துவரை வெட்டி விட்டு தப்ப முயன்ற நபரை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். இதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்த சம்பவத்துக்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -
தாக்குதல் நடத்திய இளைஞர் விக்னேஷ்வரன் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளார். இனிமேல் தான் அவரிடம் விசாரிக்க உள்ளோம். அவரது அம்மாவுக்கு சரியான சிகிச்சை கொடுக்கவில்லை என்று தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக கொடுக்கப்படுகிறது. இங்கே எல்லா மருத்துவரும் சிறப்பான சிகிச்சையை கொடுத்து இருக்கிறார்கள்.
அதிலும் கூட இந்த டாக்டர் பாலாஜி மீது நல்ல பெயர் உள்ளது. யாரோ தவறுதலாக அந்த இளைஞரிடம் சொல்லியிருக்கிறார்கள். வெளியில் உள்ள மருத்துவர் யாரோ இந்த சிகிச்சை சரியாக செய்யவில்லை என்று அவரிடம் தவறுதலாக சொல்லியிருக்கலாம். அதனை தவறாக புரிந்துகொண்டு இப்படி செய்திருக்கிறார். இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications