எடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபர் அதிரடி கைது.. எந்த கட்சிக்காரர் தெரியுமா?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாகனம் மீது செருப்பு வீசிய நபர் கைது செய்யப்பட்டு, 15 நாள் ரிமாண்ட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை ஆதரித்து ஒரத்தநாட்டில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு செருப்பு. அது, நல்லவேளையாக முதல்வர்மீது படவில்லை. ஆனால் உடன் நின்றிருந்த வைத்திலிங்கத்தின் கையில்பட்டு, வேன் மேலேயே விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ம அடி
கூடியிருந்த அதிமுகவினர் செருப்பு வீசிய நபரை வளைத்து பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதைப் பார்த்த போலீசார், கூட்டத்தினரிடமிருந்து மீட்டு, அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணை
போலீசார் விசாரணையில், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வேல்முருகன் அவர் எனத் தெரியவந்தது. கேட்டரிங் படித்துள்ள வேல்முருகன், செருப்பு வீசும் நோக்கத்தில், அதிமுகவின் கரைவேட்டியை கட்டியபடி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து சென்றுள்ளார்.

அமமுக
மத்திய மண்டல ஐஜி வரதராஜு உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் வேல்முருகன், டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. முன்பு இவரது குடும்பம் அதிமுகவில் உறுப்பினராக இருந்துள்ளதாம்.

15 நாட்கள் ரிமாண்ட்
இருப்பினும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கான சிகிச்சை ஆவணங்கள் உள்ளதாகவும், வேல்முருகன் குடும்பத்தார் போலீசில் தெரிவித்தனர். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கும் நிலையில், 15 நாட்கள் வேல்முருகனை ரிமாண்ட் செய்துள்ளனர் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications