குற்றாலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! 1 லட்சம் பேரை திரட்டி வரவேற்பு கொடுக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.!
தென்காசி: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வரும் 8ஆம் தேதி தென்காசி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி சென்றடையும் அவர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் அன்று மதியம் ராஜபாளையம் செல்கிறார்.

முதல் முறையாக
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இதன் காரணமாக தென்காசியில் முதல்வருக்கு மிக உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ள அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அங்கு முகாமிட்டு வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகிறார். 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறது.

1 லட்சம் கட்சிக்காரர்கள்
இதனிடையே 1 லட்சம் கட்சிக்காரர்களை திரட்டி தென்காசி, குற்றாலம், ராஜபாளையம், என முதல்வர் பயணிக்கும் இடங்களிலெல்லாம் எழுச்சி மிகு வரவேற்பு கொடுக்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தான் மருத்துவர்கள் கூறிய அறிவுரையையும் மீறி சென்னையிலிருந்து தென்காசிக்கு சென்று களத்தில் இறங்கி காரியமாற்றிக் கொண்டிருக்கிறார். தென்காசி மாவட்டச் செயலாளர்களான சிவ்பத்மநாதனும், ராஜாவும் அமைச்சருடன் இணைந்து முதல்வரை வரவேற்கும் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் பயணம்
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் வழக்கமாக விமானம், கார் என பயணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதல்முறையாக ரயிலில் தென்காசிக்கு செல்வது தான். இதனிடையே குற்றாலம் அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் மட்டும் தங்கி ஓய்வெடுக்கும் ஸ்டாலின், அடுத்தடுத்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

தென் மாவட்ட அமைச்சர்கள்
முதலமைச்சருடன் இந்த நிகழ்ச்சியில் தென் மாவட்ட அமைச்சர்களான ஐ.பெரியசாமி, மூர்த்தி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திமுகவில் ஒரு தரப்பினர் முதல்வரிடம் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக நீண்ட புகார் மனுவை அளிக்க தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications