அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் ருசியான பண்ருட்டி பலாப்பழம் வழங்கிய அமைச்சர்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பண்ருட்டியிலிருந்து வாங்கி வரப்பட்ட பலாப்பழத்தை வழங்கியிருக்கிறார்.
வேளாண்மைதுறை மீதான மானியக் கோரிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இந்த பலாப்பழத்தை விநியோகம் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தினம் தோறும் ஒன்று அல்லது இரண்டு துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று வேளாண்மைத்துறை, மீன் வளத்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.
வேளாண்மைத் துறை சார்பில் ஏற்கனவே வேளாண் பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் நேற்றைய தினம் பெரிதாக எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
ஆனால் அதே வேளையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை என்பதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை உயர் அதிகாரிகளுக்கு பண்ருட்டி பலாப்பழத்தை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கே பலாப்பழங்கள் எடுத்துச்செல்லப்பட்டு டோர் பை டோராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் வழங்கியுள்ளனர். பண்ருட்டி பலாப்பழத்தில் ருசி மிகுதியாக இருக்கும் என்பதால் பல எம்.எல்.ஏ.க்களும் இதனை உடனடியாக ருசி பார்க்கத் தொடங்கினர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த பேதமும் இல்லாமல் பலாப்பழங்கள் வழங்கப்பட்டன. பாமக உறுப்பினர்கள் கூட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடுத்த பலாப்பழத்தை தட்டாமல் வாங்கிக் கொண்டனர்.
மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையாக நிறைவுறும் வரை இன்னும் என்னென்ன பரிசுகளெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications