போனை எடுத்த பெண்களுக்கு சர்பிரைஸ்.. அந்த பக்கம் ஸ்டாலின்! ரூ.1000 உரிமைத்தொகை வந்துருச்சா?
சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்திருந்த மேலும் பல பெண்கள் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து வந்த போன் காலால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இதற்காக 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் செப்டம்பர் மாதம் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசாணையில் இடம்பெற்ற தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலமாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தீர்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் சேர்க்கப்பட்டனர். இறந்து போனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் கைப்பேசி எண்களுக்கு கடந்த மாதம் அரசு அலுவலர்கள் தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் சரிதானா என கேட்ட அதிகாரிகள், அது உறுதியானால் இந்த மாதம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விண்ணப்பதாரர்களிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு முன்பாக நேற்றே மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படும் என அரசு தெரிவித்த நிலையில், கூடுதல் பயனாளிகளும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மேல்முறையீடு செய்த மகளிருக்கு போன் கால் வந்தது. மறுமுனையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலினின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில் உங்கள் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டதாக முதலமைச்சர் கூறியவுடன் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications