மூளைக் காய்ச்சலால் கோவையில் இளம்பெண் உயிரிழப்பு... பீகாரைத் தொடர்ந்து பரவுகிறதா?
கோவை: கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பால் 117 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், கோவை சரவணம்பட்டி அருகே, விநாயகபுரத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா. கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலில் 100 க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், கோவையில் இளம் பெண் பலியான சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளதுடன், சுகாதாரதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications