என்ன நடக்கிறது கோவையில்.. உழவர்கள் கூட்டத்தில் ஹிந்தியில் பேனர்.. உச்சகட்டத்தில் திணிப்பு!
கோவை: கோவையில் நேற்று (அக்.14) நடைபெற்ற உழவர்கள் கூட்டத்தில் மத்திய மாநில அமைச்சர்கள் பங்கேற்றிருந்த நிலையில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மும்மொழியில் வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல இக்கூட்டத்தில் அரசு பொறுப்பில் இல்லாத பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி விழா மேடையில் அமர்ந்திருந்தது குறித்தும் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த உத்தம ராமசாமி திமுக எம்.பி ஆ.ராசா குறித்து அவதூறாக பேசி சமீபத்தில்தான் சிறை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் கோவை பாஜக வசம் செல்கிறதா? என்கிற கேள்வியையும் சிலர் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

மும்மொழி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 'உழவர்கள் கூட்டம்' நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மற்றும் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இவ்வாறு இருக்கையில் இந்த நிகழ்ச்சி மேடையில் நிகழ்ச்சி குறித்து அச்சடிக்கப்பட்டிருந்த பேனரில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம் பெற்றிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்
ஏற்கெனவே தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என பாஜக தொடர்ந்து கூறி வரும் நிலையில் பொதுவெளியில் அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தி மொழி எவ்வாறு இடம் பெற்றது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் 'இந்தி மொழியை திணிக்காதீர்' என சமூக செயற்பாட்டாளர்கள் பேரணி சென்றனர். இதில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களை கையில் ஏந்தியிருந்தனர்.

பாஜக
ஆக இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் அரசு நடத்தும் விழாவில் இந்தி எப்படி இடம்பெற்றிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் மேலெழுந்துள்ளன. அதேபோல இந்த விழா மேடையில், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் அமர்ந்திருந்த நிலையில் அரசு பொறுப்பில் இல்லாத பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியும் ஒன்றாக அமர்ந்திருந்தார். இந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்
அவருக்கு யார் இருக்கை ஒதுக்கியது? என்றும், இதனை அரசு மற்றும் பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கிறதா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த உத்தம ராமசாமி திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தார். அதில், "தைரியம் இருந்தால் காவல்துறையின் பாதுகாப்பு இன்றி கோவையில் ஆ.ராசா கால் வைக்கட்டும் பார்க்கிறேன்" என்று பேசியிருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications