கோவை போலீசார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்.. ஏழு பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
கோவை: கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பெண்ணா விஸ்வதர்ஷினி மீது கோவை செல்வபுரம் போலீசார் எழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 44 வயதாகும் விஸ்வதர்ஷினி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுமியையும், நடிகர் விஷாலையும் இணைத்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எதுவும் சொல்லவில்லை.. அதேநேரம் சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை ஏற்று, சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விஸ்வதர்ஷினியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த விஸ்வதர்ஷினி தனியார் தொலைக்காட்சியில் புழல் சிறை குறித்து அவதூறாக பேசி இருந்தாராம். இதையடுத்து கோவை துடியலூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட போது விஸ்வதர்ஷினி அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு கோவை துடியலூர் போலீசார் விஸ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே விஸ்வதர்ஷினி கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பண மோசடியால் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கோவை செல்வபுரம் போலீசார் விஸ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னதாக அவர் கோவை போலீசார் குறித்து அவதூறாக பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜா புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் பேரில் கோவை செல்வபுரம் போலீசார் விஸ்வதர்ஷினி மீது மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications