கோவையில் போலி தகவல் பரப்பிய சார் பதிவாளர்.. லெஃப்ட் அண்டு ரைட் வாங்கிய விவசாயிகள்.. வைரல் வீடியோ
கோவை: பத்திரப் பதிவு தடை செய்யப்பட்டு இருப்பதாக பொய் தகவலை பரப்பிய பதிவாளரை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் பேசும் வசனம்போல், விவசாய சங்கத் தலைவர், பத்திரப் பதிவு பதிவாளரிடம் கேட்ட கேள்விகள் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் சுமார் 3 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதில் 2,500 க்கும் மேற்பட்ட நிலங்கள் விவசாய நிலங்களாகும். இதைக் கண்டித்து விவசாயிகளும், பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு திமுக மூத்த தலைவரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருந்தார். இதனால், விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த 6 பஞ்சாயத்துகளிலும் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு இன்னும் நீக்கவில்லை. இதனால் தங்கள் நிலங்களை விற்பதற்கும், பாகப்பிரிவினை செய்வதற்கும், நிலத்தின் பேரில் கடன் வாங்கவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ஒருபக்கம் கையகப்படுத்தப்படாது என்று கூறும் அரசு, மறுபக்கம் விவசாய நிலங்களைப் பதிவு செய்ய விடமாட்டோம் என்று கூறுவது அந்தப் பகுதி விவசாயிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. பத்திரப் பதிவு துறை சார் பதிவாளர் செல்வ பாலமுருகன் கையில் சில ஆவணங்களுடன் வந்து, பத்திரப்பதிவு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. வதந்திகளை எல்லாம் நம்ப வேண்டாம்.
உங்களுக்கு யாரோ தவறான தகவல்களை கூறுகின்றனர் என்று கூறியதும் கொந்தளித்த விவசாயிகள், எதற்காக மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்க அதிகாரி அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தார். அப்போது, விவசாயி சங்கத் தலைவர் குமார ரவிக்குமார், ஜாக்கிரதை. எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது.
கேட்பதற்கு முறையாக பதில் சொல்லுங்கள். காவல் துறையை மீறி எதுவும் நடக்காதா. ஆன்லைனில் புகார் பதிவு செய்துவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வந்து நடவடிக்கை எடுப்போம்.

நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லை. அரசரும் இல்லை. நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நியமிக்கப்பட்டுள்ள அரசு பணியாளர். எங்கள் மக்கள் வரிப் பணத்தில் இருந்துதான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டப்படி பணியாற்றவில்லை எனில் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
இந்நிலையில், அரசு அறிவிப்பின்றி தன்னிச்சையாக பதிவாளர் செயல்பட்டதாகவும், இதனால் விளை நிலங்களின் விலை, மிகக் கடுமையான வீழ்ச்சி அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சார் பதிவாளரை விவசாயிகள் சங்கத் தலைவர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications