பாஜக வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு தொகுதியை தாரை வார்ப்பதா? சாபமிட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியை பாஜகவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இன்று கோவையில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் புரண்டும் சாபமிட்டும் போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் கோவை தெற்கு தொகுதியை பாஜக கேட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் கோவை தெற்கு தொகுதி அதிமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வான அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள் இன்று கோவை அதிமுக அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டனர்.
கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு கொடுக்காதே! அதிமுகவுக்கே கொடு! அம்மன் அர்ஜூனனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடு! என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்டைகளை கழற்றி எறிந்துவிட்டு தரையில் படுத்து புரண்டபடியே முழக்கங்களும் எழுப்பினர்.
மேலும், கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுத்தால் நிச்சயம் அதிமுகவினர் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம். அதற்கான கடிதத்தையும் தயாராகவே வைத்திருக்கிறோம். எங்களது எதிர்ப்பை மீறி பாஜகவுக்கு இந்த தொகுதியை கொடுத்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் எனவும் ஆவேசமாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications