தடைவிதித்த காவல்துறை.. அதை உடைத்த அண்ணாமலை! கோவையில் இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கோவை: பாஜக அலுவலகம் மற்றும் தலைவர்கள் மீதான பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலால் கோவையில் பதற்றம் தொடர்ந்து வரும் சூழலில் போலீஸ் தடையை மீறி இன்று மாலை பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.
அய்யா கிணத்தைக் காணோம்யா.. அலற விட்ட ஜேபி நட்டா.. அரூப கப்ஸாக்களை அள்ளிவிடும் பாஜக.. முரசொலி தாக்கு
பெட்ரோல் குண்டு வீச்சு
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமார் 20 இடங்களிலில் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள். இதில் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும் தொடர் தாக்குதல்களால் பதற்றம் நிலவுகிறது.
வாகனங்கள் எரிப்பு
இதேபோல், இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சிவசங்கர் என்பவரது காரும் எரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியிலும் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.
போலீஸ் எச்சரிக்கை
பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 பேர் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பாஜக போராட்டம்
இந்த நிலையில் அதிக பதற்றத்துடன் காணப்படும் கோவையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்து இருந்தது. ஆனாலும் அதை மீறி இன்று மாலை 4 மணியளவில் கோவையில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது. அதில், "தமிழக சட்டம் ஒழுங்கில் மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்தும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வேண்டுமென்றே கைது செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்." நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.