அந்த 2 சீட் ‘அல்டிமேட்’ டார்கெட்.. கன்பார்ம் போல! “மக்கள் சேவகன் தேவை”.. குறிவைத்து பேசிய அண்ணாமலை!
கோவை : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 2 வெற்றி வேட்பாளர்களை கோவை, நீலகிரி தொகுதி மக்கள் கொடுக்க இருக்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் இருந்து 25 எம்.பிக்கள் பாஜகவிலிருந்து டெல்லி செல்வார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருக்கிறார்கள். பாஜக, கோவை, நீலகிரி ஆகிய தொகுதிகளை குறிவைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அண்ணாமலையின் பேச்சு அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
கோவை காரமடை அருகே பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2024 தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமாகவே இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளது பாஜக. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை, நீலகிரி தொகுதிகளுக்கு திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்றும், பாஜக அரசு நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வர இருக்கிறார் என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.

2 தொகுதிகள் அச்சாரம்
இந்தப் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், 2024 தேர்தலில் பாஜகவின் இரண்டு வெற்றி வேட்பாளர்களை கோவை, நீலகிரி தொகுதியில் கொடுக்க இருக்கிறார்கள் என்பதற்கு அச்சாரமாக இந்த விழா இருக்கிறது. மத்திய பாஜக அரசு பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மாநில அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி வளர்ந்திருக்கிறதா என்று கேட்டால் உண்மையாக இல்லை என்று நான் கூறுவேன். நீலகிரியில் இன்றைக்கும் கூடலூரில் இருந்து ஆத்திர அவசரத்திற்கு ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் இல்லை. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் இங்கு ஒரு மருத்துவமனை இல்லை.

மக்கள் சேவகன் தேவை
இதனை அறிந்த பிரதமர் மோடி அனுமதி வழங்கிய 11 புதிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றினை நீலகிரிக்கு வழங்கியுள்ளார். கோவைக்கு இஎஸ்ஐ மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகுதிகளில் பாஜகவுக்கு எம்.பிக்கள் இல்லை என்றாலும் கூட, இந்த 8 ஆண்டுகளில், பிரதமர் மோடி கோவை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் வாரி வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரதமரும், மத்திய அரசும் என்னதான் கொடுத்தாலும், அதை சரியாக கொண்டு வந்து இங்கு மக்களிடம் கொடுப்பதற்கு, ஒரு மக்கள் சேவகன் தேவைப்படுகிறான்.

பாஜக - தனிமனிதர்களை அடையாளப்படுத்தாது
18 கோடி தொண்டர்களை கொண்ட, ஜனநாயகத்தின் வழி நடக்கும் உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. பாஜக எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது. பாஜக தனி மனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. கட்சியின் தொண்டர்களையும் சித்தாந்ததையும் மட்டுமே முன்னிலைப்படுத்தும். மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து அதற்கு புதிய பெயர் வைப்பதில் தி.மு.க மிகச் சிறந்து விளங்குகிறது.

எதை கொடுக்கலாம்
கொங்கு பகுதியில் இருந்து திமுக எதை எடுத்துச் செல்லலாம் என நினைக்கிறது. ஆனால், எதை கொடுக்கலாம் என பாஜக நினைக்கிறது. இந்த முறை பாஜக சார்பில் 25 எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். வெட்கமும், மானமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான். சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காதது ஏன் ?

திமுக
திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு குழப்பமான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, திமுக, காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம். திமுக, எப்போதுமே தமிழுக்கும், தாழ்நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராகத் தான் செயல்பட்டு வந்துள்ளது. ஜே.பி.நட்டாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று பேசியுள்ளார்.

2 தொகுதிகள் குறி
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு கோவை மற்றும் நீலகிரி தொகுதிகளை பாஜக முழுமையாக குறிவைத்து விட்டதையே காட்டுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவின் முன்னணி தலைவர்கள் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதையொட்டியே, தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் இங்கு களமிறக்கி, ஓப்பனாகவே பாஜகவில் இருந்து 2 எம்.பிக்களை இந்த மக்கள் தரப்போகிறார்கள் எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications