5 அடி தான் உயரம்.. உடல் எடை 100 கிலோ! ஜெயலலிதா உடல்நிலை இப்படித்தான் இருந்தது! ஆறுமுகசாமி தகவல்!
கோவை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது கிரியாட்டின் அளவு பாயிண்ட் 68 மி.கிராம் இருந்ததாக அவரது மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.
Flashback 2022: ஜெயலலிதா மரண மர்ம முடிச்சுகள்..2022ல் அதிர வைத்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
ஜெயலலிதா மரணம்
ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுக்கடுக்காக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.
7 பேர் காரணம்
ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படாததற்கு 7 பேர் காரணம் எனவும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை எதிராக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் , சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதற்கு எதிராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கப்பட்டது.
ரத்த வெள்ளம்
டிசம்பர் 4ஆம் தேதி அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மாரடைப்பு ஏற்பட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தன்னிடம் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்ததோடு, வார்டில் சென்று பார்த்த போது ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு தான் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆறுமுகசாமி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது. கிரியாட்டின் அளவு பாயிண்ட் 68 மி.கிராம் இருந்ததாக அவரது மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கூறியுள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது கிரியாட்டின் அளவு பாயிண்ட் 68 மி.கிராம், ரத்த அழுத்தம் 120ஆக இருந்தது எனவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள் மடிக்கணியை வைத்துக்கொண்டு தேடிப் பாருங்கள் உங்களுக்கே முடிவு தெரியும். மருத்துவர்களிடமும் ஆய்வு செய்து பாருங்கள்" என்றார்.