அடடா! இவ்ளோ பெரிய சிக்கலா? முதல்வர் திறந்து வைக்க உள்ள கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் ஆய்வு
கோவை: புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் விபத்து அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இப்போது திறக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
"மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்க உள்ளார். செம்மொழி பூங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அன்றைய தினம் நடக்கிறது. மேலும், பெரியநாயக்கன்பாளையம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020 நவம்பரில் துவங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம், அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த புதிய மேம்பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் முடிவடைந்து தற்போது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 18ல் இதை மக்களின் முழுமையான பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த பாலத்தில் பெரிய சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் சோதனை ஓட்டத்தின் போது மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் சில சிக்கல்களை உணர்ந்ததாகவும் இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திலிருந்து கீழ்நோக்கி வரும் இறங்குதளமும் சர்வீஸ் சாலையும் சந்திக்குமிடம் மிக நெருக்கமாக இருக்கும்படி உள்ளதாகவும் பாலத்திலிருந்து இறங்கும் வாகனங்களும் ஒரே இடத்தில் திடீரென சந்திப்பதால், விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு சர்வீஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும் வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் பாலத்தில் இருக்கும் இந்த பிரச்சனையை சரிசெய்யாமல், குறிப்பாக மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை அனுமதிப்பது நல்லதல்ல என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை சரிசெய்யாவிட்டால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது.
வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக செல்வதால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது, குறிப்பாக இரவு நேரங்களில், வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் ஆய்வுப் பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.
சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் மனுநீதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (பொறுப்பு) செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர். சர்வீஸ் ரோட்டை 40-50 மீட்டர் தூரத்துக்கு நீட்டிப்பதற்கு, அப்பகுதியில் 200-250 சதுர மீட்டர் அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் விபத்து ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பிறகுதான் பாலம் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், வரும் 18ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications