சிங்கிளாவே "21.57%.." இலையும் இருக்கு.. வானதி சீனிவாசன் வெற்றியை உறுதியாக நம்பும் பாஜக.. பரபர கோவை
கோவை: கடந்த 10 வருடங்களாக கோவை தெற்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டுதான் வருகிறது. ஆனால் வெற்றி பெற்றதுதான் கிடையாது. இந்த முறை சரித்திரம் மாற்றப்படும். வானதி சீனிவாசன் வெற்றி பெற்று விடுவார் என நம்புகிறது பாஜக.
பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி என மிகப்பெரிய நட்சத்திர பேச்சாளர்கள் முழுக்க கோவை தெற்கு தொகுதியில் முகாமிட்டு இருப்பதற்கு காரணம் பாஜக வெற்றி பெற முடியும் என்று ஓரளவுக்கு உறுதியாக நம்பிக் கொண்டிருக்க கூடிய தொகுதியாக இது இருப்பதுதான்.
இந்த திருமாவளவனை விலைபேச எந்த கொம்பனும் பிறக்கல.. பஸ்ஸ கொளுத்த கத்துதந்தது அவங்கதான்.. திருமா ஆவேசம்
வானதி வானதி சீனிவாசன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்றால் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
வானதி vs கமல்
கமல்ஹாசனுக்கு இருக்கக்கூடிய பிரபலம் காரணமாக இப்போது அங்கு போட்டி வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன் vanathi srinivasan vs kamal haasan என்ற அளவுக்குப் போய்விட்டது. இருவரது பிரச்சாரமும்தான் மக்களிடம் எளிதாக சென்று சேருகிறது. அதை நேரம் மயூரா ஜெயக்குமார் சும்மாயில்லை. வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
வார்த்தை மோதல்கள்
ஆனால் வானதி சீனிவாசனை துக்கடா அரசியல்வாதி என்று கமல்ஹாசன் சொல்ல.. அவர் உதட்டு சேவை செய்தவர்தான் தவிர, மக்கள் சேவை செய்தவர் கிடையாது என்று பதிலுக்கு வானதி சீனிவாசன் சொல்ல.. கோவை தெற்கு பரபரத்துக் கிடக்கிறது.
அதிமுக ஓத்துழைப்பு
வானதி சீனிவாசன் வெற்றிக்கு கமல் மட்டும் முட்டுக்கட்டை கிடையாது அங்கு சிட்டிங் எம்எல்ஏ அதிமுகவை சேர்ந்த அம்மன் அர்ஜுன். ஆனால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். எனவே அந்தத் தரப்பு வானதி சீனிவாசனுக்கு முழு ஒத்துழைப்பு தருமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அதே நேரம் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு அம்மன் அர்ஜுன் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அவர் ஆதரவாளர்கள் மனநிலைதான் இரட்டை இலை வாக்குகளை தாமரைபாக்கம் கொண்டு வருமா வராதா என்பதை முடிவு செய்யப் போகிறது.
வரலாறு
பாஜக, கோவை தெற்கு தொகுதியை மட்டும் மலைபோல் நம்பி கொண்டிருப்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. 1949ம் ஆண்டு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது "ஷாகா" கூட்டத்தை கோவையில்தான் நடத்தியது. இதுபற்றி கோவை ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜமதுரை துரை கூறுகையில், கோவை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 2500க்கும் மேற்பட்டோர் ஆக்டிவ் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் ஆதரவு
வானதி சீனிவாசனுக்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வானதி சீனிவாசன் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினராக இருந்தவர். அவரது கணவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தவர். எனவே தூய்மையான அரசியலை வானதி சீனிவாசன் வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கோவை ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த பலரும் தற்போது பாஜகவில் இருக்கிறார்கள்.
3 காரணங்கள்
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதற்கு, மூன்று காரணங்கள் இருக்கின்றன. கோவை நகரில் வசிக்கக்கூடியதில் 90 சதவீதம் பேர் இந்துக்கள். அதில், 50% தமிழை தாய்மொழியாக கொண்டிராத, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி பேசும் மக்கள். அதுமட்டுமில்லாமல், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நகரமாக இருப்பதால் அங்குள்ள மக்கள் தேசிய கட்சியைதான் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
21.57 சதவீதம்
2008ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் போது உருவான கோவை தெற்கு தொகுதி அதிமுகவுக்கு பலம் வாய்ந்த பகுதியாக மாறியது. 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் இந்த தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 2011ஆம் ஆண்டு இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட நந்தகுமார் 5 ஆயிரம் வாக்குகளை பெற்றார். 2016-ம் ஆண்டு வானதி சீனிவாசன் 33 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்று மொத்தம் பதிவான வாக்குகளில் 21.5 7 சதவீத ஓட்டுக்களை தன்பக்கம் இழுக்க முடிந்தது. மூன்றாவது இடத்தைப் பெற்றார். அதுவும், ஜெயலலிதா கருணாநிதி இருந்தபோது நடைபெற்ற தேர்தல் அது. பாஜக தனித்து இவ்வளவு ஓட்டுக்களை பெற்ற ஒரே தொகுதி இதுதான்.
கூட்டணி பலம்
கடந்த முறை பாஜக தனித்து நின்றது. இந்தமுறை அதிமுகவுடன் நிற்கிறது. எனவே, வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகிறது பாஜக. அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடிய வாக்கு சதவீதம்தான், பாஜக கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புவதற்கு முக்கிய காரணம்.