ஓவர் ‘ஓவர்டேக்’.. அந்த ஏரியா ‘அமைதியோ அமைதி’க்கு காரணம் இதானா? பெரிய களேபரமே நடந்தும் சீனில் வரலையே!
கோவை : கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கெத்து காட்டும் நிலையிலும் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், பாஜகவை பேசவிட்டு, தாங்கள் அமைதி காப்பது ஏன் என்ற விவாதம் கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மிகத் தீவிரமாகக் களமாடி வருகிறது. அதேசமயம், அதிமுக 'அமைதியோ அமைதி' என்ற பொசிசனில் இருக்கிறது.
சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக அட்டாக் செய்தது.
அதோடு நிற்காமல் நாள்தோறும் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பரபரப்புகளைக் கிளப்பி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த பிரச்சனை தொடர்பாக திமுக - பாஜக இடையே பெரும் அரசியல் யுத்தமே நடக்கிறது. பாஜக தங்களை ஓவராகவே ஓவர்டேக் செய்து வந்தாலும் அதிமுக அமைதி காக்கிறது.

பாஜக தீவிரம்
கோவை கார் சிலிண்டர் சம்பவம் நடந்தது முதல் இப்போது வரை பாஜக தொடர்ந்து தீவிரமாக களமாடி வருகிறது. கோவை சம்பவம், 1998 கோவை குண்டுவெடிப்பு என கனெக்ட் செய்து, இதற்குப் பின்னணியில் பயங்கரவாத சதி நடவடிக்கை இருப்பதாக பாஜகவே முதன்முதலில் குற்றம்சாட்டியது. மேலும், நாள்தோறும் இந்தச் சம்பவம் தொடர்பாக விவாதங்களைக் கிளப்பி வருகிறது பாஜக. இதற்கிடையே கோவையில் பந்த் நடத்தவும் திட்டமிட்டு பின்னர் கடுமையான எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது பாஜக.

அண்ணாமலை பரபர
கோவை சம்பவத்தை பாஜக எந்தளவுக்கு கையில் எடுத்தது என்பதற்கு, அண்ணாமலைக்கு தமிழக காவல்துறையே பதில் அறிக்கை வெளியிட்டதே ஒரு உதாரணம். மேலும், பாஜகவின் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக காவல்துறை மீது சுமத்திய நிலையில், திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் பிரஸ் மீட் கொடுத்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார். எனினும், சம்பவ இடத்தில் ஆய்வு செய்வது, கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்று கந்த சஷ்டி கவசம் பாடுவது என அண்ணாமலையின் அதிரடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அமைதியோ அமைதி அதிமுக
ஆனால், அதிமுக இந்த விவகாரத்தில் நீண்ட மௌனத்தையே கடைபிடிக்கிறது. சம்பவம் நடந்த அன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவே இது பார்க்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதேபோல ஓ. பன்னீர்செல்வம், டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார் என்றால், இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது. இது, திமுக ஆட்சியில் 1998இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது. முதல்வர் உடனடியாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாஜக ஆதிக்கம்
அதன்பிறகு, அதிமுகவின் இரு அணிகள் சார்பிலும் இந்த விவகாரத்தில் எந்தக் கருத்தும் வரவில்லை. மொத்தமாக பாஜகவே ஆதிக்கம் செலுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட கடந்த பல மாதங்களாகவே பாஜகவே எல்லா விஷயத்திலும் தீவிரம் காட்டி வருகிறது தான் என்றாலும் கூட, இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் அதிமுக லேசாக கூட முணுமுணுக்காமல் அமைதி காத்தது அரசியல் நோக்கர்கள் மத்தியில் விவாதத்தையே கிளப்பிவிட்டது.

அரசியல் காரணம்
இத்தனைக்கும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பும், கோவை வெடிப்பு விவகாரத்தில் திமுக அரசுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்க முயலவில்லை. அதற்குக் காரணம், இஸ்லாமியர்களுக்கு எதிரான வகையில் தங்கள் கருத்துகள் எடுத்துக் கொள்ளப்படலாம், அது நமக்கு சிக்கலைத் தரும் என்பதன் காரணமாக அதிமுக அமைதி காக்கிறது, அதனால் தான் வழக்கமாக பாஜகவுக்கு மற்ற விஷயங்களில் அளிக்கும் ஆதரவைக் கூட இந்த விவகாரத்தில் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது.

ஒண்ணுதான் பிரச்சனையா
கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் அதிமுக அமைதி காப்பது ஏன் என்பது தொடர்பாக செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், நாங்கள் ஒரே பிரச்சனையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க முடியாது, மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன, ஒவ்வொரு பிரச்சனைக்காகவும் போராட வேண்டிய கடமை எதிர்க்கட்சியான எங்களுக்கு இருக்கிறது, தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதுதான் எப்போதுமே எங்கள் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

அவர் புதுசு.. அதான்
மேலும், இந்த விஷயத்தில் தினமும் பேசுவதை வைத்து பாஜக எதிர்க்கட்சி எனச் சொல்லக்கூடாது. அண்ணாமலை அரசியலுக்குப் புதியவர் என்பதால், கட்சியை வளர்க்க தொடர்ந்து பேசுகிறார். நாங்கள் 7 முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சி, நாங்களும் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு கருத்துச் சொல்ல வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். உண்மையில், எடப்பாடி தரப்பின் நிலைப்பாடு இதுதானா, அல்லது இஸ்லாமிய வாக்கு வங்கி அச்சமா என்பது ஈபிஎஸ்ஸுக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications