ஜெராக்ஸ் கடை, புரோக்கர்.. ஸ்கெட்ச் போட்டு லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. தட்டித் தூக்கிய போலீஸார்
கோவை: கோவையில் நகர ஊரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்துக்கு கட்டட அனுமதி, மனைப் பிரிவு, நிலப்பயன் மாற்ற அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களிடம் இருந்து புரோக்கர் மற்றும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மூலமாக லஞ்சம் வாங்கி வந்த அரசு அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் தொடங்கி கட்டட அனுமதி சான்று, மனைப் பிரிவு அனுமதி என ஒவ்வொரு தேவைக்கும் அரசு அதிகாரிகள் பலரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வாங்கி சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்த சம்பவங்கள் இதுவரை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், கோவையில் ஜெராக்ஸ் கடை மற்றும் புரோக்கர் மூலமாக நூதனமாக லஞ்சம் பெற்று வந்த அரசு அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், காந்திமாநகரில் நகர ஊரமைப்பு இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நகர ஊரமைப்பு இணை இயக்குநராக ராஜகுரு என்பவர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், இவர் கட்டட அனுமதி, மனைப் பிரிவு அனுமதி, நிலப்பயன் மாற்ற அனுமதி பெற லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் வந்தது.
இந்தப் புகாரையடுத்து இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அக்டோபர் 23 ஆம் தேதி சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது நகர ஊரமைப்பு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பலரும் அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு வருவதைப் பார்த்த அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அந்த ஜெராக்ஸ் கடைக்குள் சென்றபோது அந்தக் கடையின் உரிமையாளர் பொன்னப்பன் என்பவரின் மேஜையில் சுமார் ரூ. 4 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின்போது ஜனார்த்தனன் என்பவர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக அனுமதி பெறுவதற்காக அவரிடம் பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் பொன்னப்பன், ஜனார்த்தனனிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜனார்த்தனன் தனது வணிக கட்டடம் கட்டுவதற்கான அனுமதிக்காக ஏற்கனவே ரூ. 12 லட்சம் கொடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் மேலும் ரூ. 3 லட்சத்து 96 ஆயிரத்து 100 பணத்தை கொடுத்த பிறகுதான் வணிக கட்டடத்திற்கான திட்ட அனுமதி ஆணையை பொன்னப்பன் கொடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
இதனால், அந்தப் பணம் நகர ஊரமைப்பு அதிகாரிக்கு லஞ்சமாக கொடுப்பதற்காக பொன்னப்பன், ஜனார்த்தனனிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், பணத்தையும், ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட நகர ஊரமைப்பு இணை இயக்குனர் (பொ) ராஜகுரு மற்றும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பொன்னப்பன் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications