கோவையில் நெஞ்சுவலியால் துடிதுடித்த பெண்.. குண்டு குழி சாலையால் சிக்கிய வேன்.. நடந்த கொடுமை
கோவை: கோவையில் குண்டும், குழியுமாக சாலை இருந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் சேரும் சகதியுமாக மாறியது. அந்த சாலையில் சென்ற வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அதன் பின்னால் சென்ற காரில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் ஒரு மணி நேரமாக சாலையில் அவதிப்பட்டபபடி சிகிச்சைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்தார்.
கோவை குனியமுத்தூர் சக்தி நகரில் ஓய்வு பெற்ற மின் ஊழியரின் மனைவியான 70 வயதாகும் பாப்பாத்தி என்ற நாகம்மாள் தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு கோவை மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவரது கார் சக்தி நகரில் சென்ற போது, அதற்கு முன்னால் ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. ஆனால் கோவை நகரில் திடீரென பெய்த மழை காரணமாக சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
இதனால் சாலையில் குண்டு, குழி மற்றும் பள்ளங்கள் இருப்பது சரக்கு வேன் ஓட்டுநருக்கு தெரியவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற சரக்கு வேன் சாலையில் இருந்த மோசமான பள்ளத்தில் சிக்கியது. சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் காரை முன்னோக்கி நகர்த்த முடிய வில்லை.
மேலும் பின்னால் வாகனங்கள் நின்றதால் காரை பின்னோக்கி எடுக்கவும் முடியவில்லை. இதற்கிடையே காருக்குள் இருந்த நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டு இருந்தார். வேன் சென்றால் தான் பின்தொடர்ந்து செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் ராஜபாண்டியன் பரிதவித்து போனார்.
இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் வேன் மீட்கப் பட்டது. அதன்பிறகு ராஜபாண்டியன் வேகவேகமாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை சக்தி நகர் பகுதி மக்கள் கூறும் போது குண்டும், குழியுமாக சாலை இருந்ததால் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. மேலும் மழை காரணமாக அந்த சாலையில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கிறது. நாங்கள் பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறோம். ஆனால் சாலை அமைப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.
கோவை நகரில் சாலை மோசமாக இருந்த காரணத்தால் மருத்துவனைக்கு செல்ல முடியாமல் பெண் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது கோவை மாநகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குனியமுத்தூர் சக்தி நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications