கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் ATS ஸ்குவாட் போலீசார் தீவிர விசாரணை
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் ATS பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா அண்மையில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்ததோடு 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 144 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்காக கோவையில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த கோவை கரும்புக் கடையைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்பவர் கர்நாடகா மாநிலம், விஜயபுரா பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் டெய்லர் ராஜா தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை கோயம்புத்தூரில் பல இடங்களில் வைத்து வெடிக்கச் செய்தது தெரியவந்தது. இதனால், டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக கோவை 5 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications