கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் வெளியாகுமோ பகீர் தகவல்? சிக்கிய 6 பேரை காவலில் எடுக்கும் என்ஐஏ
கோவை: தமிழகத்தை அதிர வைத்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பில் முபின் என்பவர் உயிரிழந்தார். முபினின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் பெருமளவு வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது
இதனைத் தொடர்ந்து முபினின் கூட்டாளிகள் மொத்தம் 6 பேர் கைது செய்யபப்ட்டனர். இந்த 6 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் எனப்படும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

என்.ஐ.ஏ. விசாரணை- 43 இடத்தில் சோதனை
இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்னதாக 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

கோவை சிறையில் 6 பேர்
இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் 6 பேரும் சென்னை பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ. காவலில் எடுக்கிறது
தற்போது முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய மனுவைத் தாக்கல் செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். அதாவது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி, வேறு இடங்களில் திட்டமிட்டிருந்த நாசவேலை சதிகள் உள்ளிட்டவை குறித்து 6 பேரிடமும் விசாரிக்க இருக்கின்றனராம் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications