கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை.. இரவோடு இரவாக மர்ம நபர்கள் கைவரிசை
கோவை: நேற்றைய தினம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு அடகுக் கடை உரிமையாளர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அதைக் கவனித்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து, சுமார் 70 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஞாயிறு இரவு நாடு முழுக்க சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. பொதுவாகச் சிவராத்திரி நாளில் இரவு முழுக்க சிவ பக்தர்கள் தூங்காமல் இருப்பார்கள். இதற்காகக் கோயில்களிலும் விடிய விடியச் சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கும். அதன்படி நேற்றைய தினம் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடந்துள்ளது.

கோவை கொள்ளை
அந்தச் சிறப்புப் பிரார்த்தனையில் கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார். இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாதேவ் என்ற பெயரில் அடகுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அடகுக் கடை பின்புறத்தில்தான் ரமேஷின் வீடும் இருக்கிறது. இவர் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுவிட்டார்.
70 சவரன் நகை
அவர் வீட்டில் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்மக் கும்பல் அடகுக் கடைக்குள் நுழைந்துள்ளது. நள்ளிரவில் பின்புறம் இருக்கும் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்மக் கும்பல், அங்கிருந்த நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். சுமார் சுமார் 70 சவரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிவராத்திரி
சிவராத்திரி பிரார்த்தனையை முடித்துக் கொண்டு திரும்பிய ரமேஷ் குமாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஷட்டர் உடைக்கப்பட்டதைப் பார்த்த அவர், கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். உள்ளே தனது கடையில் இருந்து தங்க நகையும், வெள்ளிப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்காநல்லூர் போலீசார், விசாரணையைத் தொடங்கினர். மேலும், மோப்ப நாய்களும் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களும் அங்குச் சென்று, தடயங்களைச் சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணை
அடுத்த கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து, அதன் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications