"அவரு எப்பதான் ஒழுங்கா பேசியிருக்காரு".. கமல்ஹாசனை சீண்டிய சிபி ராதாகிருஷ்ணன்
கோவை: கமல்ஹாசன் எப்பொழுதாவது ஒன்றை ஒழுங்காக கூறி இருக்கிறாரா. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் தற்பொழுது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார் என்று மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பது தான் பல அரசியல் தலைவர்களின் முதல் வேலையாக இருக்கிறது. நக்சலைட்டுகளால் முன்னாள் மந்திரி எல்லாம் கொல்லப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அர்பன் நக்சலைட்டுகள் எங்கும் பரவி வருகின்றன. இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது. தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு தந்தாலும் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தின் ஆளுநர் நேர்மையானவர். அவரது கடமைகளை சிறப்புடன் செய்கிறார். அதே சமயம் அவருக்கான ஒத்துழைப்பை மாநில அரசு நல்க வேண்டும்.
நாடெங்கும் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. டாஸ்மாக் பிரச்சனை அதிகமாகி வருவது வருத்தத்திற்குரியது. அதைவிட கஞ்சா அதிகமாகி பரவி வருகிறது. தமிழக அரசு கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் நிதி குறித்து உச்ச நீதிமன்றம் இரு வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்பொழுது தருகிறார்கள்.
கமல்ஹாசன் எப்பொழுதாவது ஒன்றை ஒழுங்காக கூறி இருக்கிறாரா. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் தற்பொழுது திமுகவுடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார். இவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அது தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று நினைத்தவரை பற்றி என்னிடம் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார்.
கமல்ஹாசனின் கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்கு, எம்பி பதவிக்காக கமலஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா. எனவே பேசுகின்றபோது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முருக பக்தர் மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவது மாநில அரசின் வேலை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications