செம.. போலீஸ் ஸ்டேஷன்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள்.. டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன ‘சூப்பர்’ தகவல்!
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கோவை : போலீஸ் வேலையில் சேர இளைஞர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவல் நிலையங்களில் வரவேற்பு பிரிவைத் தொடங்கி, வரவேற்பு அதிகாரிகளை நியமிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இப்பிரிவின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாணவர்களை ஊக்குவிப்பதற்காக 'நான் முதல்வன்' என்ற சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் அந்தந்த பகுதி கல்வி நிலையங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நடத்தப்படுகிறது.

போதைப் பொருட்கள்
போதை பொருட்கள் பயன்பாடு கூடாது என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெருமளவில் போதைப்பொருள் கலாசாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, ஒடிசா போன்ற பகுதியிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு தமிழ்நாட்டு கொண்டு வரப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சைபர் குற்றங்கள்
மொபைல் போனை பயன்படுத்தி நிறைய குற்றங்கள் நடக்கிறது. வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக, அதிலும் பெண்களை குறி வைத்து செயல்படுகின்றனர். லோன் ஆப் மூலம், கடனாக பணம் கொடுத்து அதிக வட்டி கட்டச் சொல்லி மிரட்டுகின்றனர். பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது. ஆன்லைன் ரம்மியில் விளையாடி பலர் பணத்தை இழந்துள்ளனர். எனவே மாணவர்களும், இளைய சமுதாயமும் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளால் மட்டுமே இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க முடியும்.

2,300 வரவேற்பு அதிகாரிகள்
தமிழ்நாட்டில் காவல் பணிகளில், சமீபத்தில் 10 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 1000 எஸ்.ஐகளுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. 600 எஸ்.ஐக்கள் இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. போலீஸ் பணியில் சேர இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இனி போலீஸ் ஸ்டேஷன்கள் இனிமையாக காட்சியளிக்கும். அங்கு பொதுமக்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு கிடைக்கும். இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 2300 பேர் காவல்நிலைய வரவேற்பு அதிகாரியாக நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம், காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

வரவேற்பு அதிகாரி
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த அறிவுரையை தீவிரமாக எடுத்துக்கொண்ட காவல்துறை, காவல் நிலையங்களில் வரவேற்பு பிரிவைத் தொடங்கியது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி டி-6 காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்ட காவலர், அங்கு வரவேற்பு அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார்.











Click it and Unblock the Notifications