அதிமுக கூட்டணியில் தேமுதிக? எஸ்பி வேலுமணி - பிரேமலதா திடீர் சந்திப்பு.. கவனம் பெற்ற போட்டோ
கோவை: தேமுதிமுக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கூட்டணி அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தள்ளிப்போட்டு வருகிறார். திமுக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் கோவை ஈஷாவில் நடக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி - பிரேமலதா ஆகியோர் சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. தேமுதிக பொதுச்செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி முடிவை அறிவிக்கும் தேதியை தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறார்.

இருப்பினும் தேமுதிக சார்பில் திமுக மற்றும் அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் உள்ளிட்டவற்றை பிரேமலதா எதிர்பார்க்கிறார்.
ஆனால் பிரேமலதாவின் எதிர்பார்ப்பு அதிகம் என்று திமுக, அதிமுக கட்சிகள் தயங்குகின்றன. இருப்பினும் இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர தொடர்ந்து பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் மகாசிவராத்திரியான இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் திடீரென்று சந்தித்துள்ளனர்.
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா நடந்து வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த வேளையில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது மத்திய இணையமைச்சர் எல் முருகன் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசினர்? என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் தேமுதிகவை, அதிமுக தனது கூட்டணியில் இழுக்க விரும்புகிறது. இப்படியான சூழலில் தான் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications