பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்து .. கோவை பொள்ளாச்சியில் பெண்ணுக்கு எமனாக மாறிய வளர்த்த பூனை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண் ஒருவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பூனை செய்த ஒற்றை செயல், அந்த பெண்ணுக்கே எமனாக மாறி உள்ளது. ஆம்.. ஆசை, ஆசையாக வளர்த்த அந்த பூனை, வீட்டின் முன்பு சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை வாயில் கவ்வி தூக்கி வந்து தனது எஜமானியின் அறைக்குள் போட்டது. இது தான் அந்த பெண்ணின் உயிருக்கே வினையாகி உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன், கட்டுவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் தான் அதிக விஷம் கொண்ட பாம்புகள், இந்த நான்கு பாம்புகளில் எந்த பாம்பு கடித்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். இந்த பாம்புகள் எல்லாமே பொதுவாக மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலுமே தாக்குகின்றன.

உணவுகளை வேட்டையாட பாம்புகள் வரும் நேரத்தில், மனிதர்கள் தெரியாமல் அதனை மிதிக்கும் போது அல்லது பாம்புகளை அச்சுறுத்தும் போது, அல்லது பாம்புகள் அச்சப்படும் வகையிலான நிகழ்வுகள் நடக்கும் போது, அவை தாக்குகின்றன. அப்படித்தான் பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (வயது 58). இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வந்தார்கள். சம்பவத்தன்று அந்த பூனை வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்தபோது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்திருக்கிறது.. இதை கவனித்த பூனை, அந்த பாம்பை துரத்தி துரத்தி கடித்து விளையாடியது. பின்னர் அந்த பாம்பை, வாயில் கவ்வி வீட்டில் உள்ள ஒரு அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டது.
அந்த அறையில் சாந்தி அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். ஏற்கனவே பூனை கடித்த ஆத்திரத்தில் பாம்பு அங்குமிங்கும் வேகமாக ஊர்ந்த சென்று கொண்டிருந்தது. அங்கு தூங்கி கொண்டு இருந்த சாந்தியை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, பாம்பு தன்னை கடித்ததை அறிந்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சந்தோஷ் ஓடி வந்தார். அவர் உடனடியாக சாந்தியை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்துபோனார். வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு எமனாக மாறிய சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications