மதகலவரத்துக்கு முயற்சி.. முதல்ல அண்ணாமலையிடம் விசாரிங்க.. கோவை கார் வெடிப்பில் திவிக போர்க்கொடி
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் காவல்துறைக்கே தெரியாத தகவல்களை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் முறையிட்டனர்.
இந்த மனுவில் மதக்கலவரத்தை தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை பந்த்துக்கு அண்ணாமலை அழைப்புவிடுக்கவில்லையாம்.. ஹைகோர்ட்டில் கொடுத்த விளக்கம்
கோவை கார் வெடிப்பு
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அதில் இருந்த ஜமேஷா முபின் இறந்தார். இவரிடம் கடந்த 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தியது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சதிச்செயல்கள் இருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
6 பேர் கைது-என்ஐஏ விசாரணை
மேலும் சம்பவம் தொடர்பாக உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏ விசாரணையை துவங்க உள்ளது.
அண்ணாமலை பேட்டி
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இது சிலிண்டர் வெடித்த சம்பவம் இல்லை. இது குண்டு வெடிப்பு. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம். இதனால் உடனே என்ஐஏ விசாரணைக்கு வழங்க வேண்டும். அதோடு இறந்த ஜமேஷா முபின் தனது ஐஎஸ் பயங்கரவாதி போன்று ஸ்டேட்டஸ் வைத்து மரண அறிவிப்பை வெளியிட்டு இந்த சதிசெயலை நடத்தியதாக தெரிவித்தார்.
திராவிடர் விடுதலை கழகம் புகார் மனு
இந்நிலையில் தான் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதில், ‛‛கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் காவல்துறைக்கே தெரியாத தகவல்களை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சிலிண்டர் விபத்து சம்பவத்தை வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்'' என புகார் கூறப்பட்டு இருந்தது.
நிர்வாகி கூறியது என்ன?
இதைத்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர செயலாளர் நிர்மல் குமார் கூறுகையில், ‛‛ நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அண்ணாமலை மதக்கலவரம் செய்து அரசியல் செய்ய பார்க்கிறார். இப்படி வெடி விபத்து தொடர்பாக சாதாரண நபர் பேசி இருந்தால் போலீசார் அவரை விசாரணை கைது என்று நடவடிக்கை மேற்கொண்டு இருப்பார்கள். ஆகவே தமிழக அரசு அண்ணாமலையை விசாரணை செய்ய வேண்டும். காவல்துறைக்கே தெரியாத தகவல்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை. இப்படி தகவல் தெரிந்தே காவல்துறைக்கு தெரிவிக்காமல் இருப்பதற்கே முதலில் அவரை கைது செய்ய வேண்டும்" என்றார்.