கேரளாவில் இருந்து கோவைக்கு வர இ-பாஸ் கட்டாயம்.. திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!
கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருவதால் கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெகடிவ் சான்றிதழ்
கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இ-பாஸ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லா விட்டால், கட்டாயம் கோவைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவை ஆட்சியர்
கேரளாவில் இருந்து தினமும் கோவைக்கு பணிக்காக வந்து செல்பவர்கள், பல்வேறு அலுவல் ரீதியாக, வணிக ரீதியாக வந்து செல்பவர்களுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவையில் கண்காணிப்பு
இந்நிலையில் வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சியில் 2 இடங்கள், ஆனைமலை, ஆனை கட்டி, வால்பாறை உள்ளிட்ட கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் வருவது கடினம்
இ பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கிடையே கோவை மட்டுமின்றி, தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று எல்லைகள், கன்னியாகுமரி மாவட்ட எல்லைகள், தென்காசி மாவட்டம் செங்கோட்டை எல்லையிலும் இதேநடைமுறையே கடைபிடிக்கப்படுகிறது. தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.