பாசப் போராட்டம்.. தாயை தேடி அலைந்து திரிந்த குட்டி யானை.. தாய் ஏற்காத நிலையில் முதுமலையில் சேர்ப்பு!
கோவை: மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை, காடு முழுவதும் தாயை தேடி அலைந்து திரிந்தது. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், வனத்துறையினர் குட்டி யானையை முதுமலைக்கு கொண்டு சென்றனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தரையில் படுத்துக் கிடந்த 40 வயது பெண் யானைக்கு, 5 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1 ஆம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து, வனப்பகுதிக்குள் சென்றது.

பின்னர், தாய் யானை உடல் நலம் தேறிய நிலையில் கடந்த 3 ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானை, கடந்த சில நாட்களாக தனது தாயை தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.
இதனைத்தொடர்ந்து தாய் யானையை தேடி, குட்டி யானையுடன் வனத்துக்குள் வனத்துறையினர் பயணம் மேற்கொண்டனர். இதற்காக, ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பல முறை முயன்றும் தாய் யானை, குட்டியை ஏற்க மறுத்தது. இதையடுத்து, மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

குட்டி யானை மீது மனிதர் வாடை இருப்பதால் குட்டியை மற்ற யானை கூட்டங்கள் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். குட்டி யானை, தாய் யானையுடனோ அல்லது யானை மந்தைகளுடனோ சேர்க்கப்படாத நிலையில் அந்த குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குட்டி யானையை வனப்பகுதியில் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தினால் குட்டி யானையானது முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று அதிகாலை 3.40 மணியளவில் குட்டி யானைக்கு பால் மற்றும் உணவு வழங்கப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர், அதன் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் வாகனம் மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications