ரயில் மோதி 4 யானைகள் பலி: விசாரணைக்கு போன தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறை பிடிப்பு- கோவையில் டென்ஷன்
கோவை: கோவை மதுக்கரை அருகே ரயில் மோதி 4 யானைகள் பலியான சம்பவம் தொடர்பாக கேரளாவின் பாலக்காடு சென்று விசாரணை நடத்திய தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். 6 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக வனத்துறை அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். கேரளாவில் தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கோவை மதுக்கரை அருகே நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு கர்ப்பிணி யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் உயிரிழந்தது. ஒரே நேரத்தில் 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சூழல் ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்தது.

கேரளாவில் விசாரணை
இது தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். யானைகள் மரணத்துக்கு காரணமான ரயிலின் வேகம், எப்போது விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்க தமிழக வனத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு நேற்று கேரளாவின் பாலக்காடு ரயில் நிலையத்துக்கு சென்றது. அங்கு ரயில் ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தது.

தமிழக அதிகாரிகள் சிறைபிடிப்பு
அப்போது தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரளா ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறைபிடித்து வைத்தனர். இந்த தகவல் கோவை வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோவை வனத்துறை அதிகாரிகள், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

6 மணிநேரத்துக்கு பின் விடுவிப்பு
சுமார் 6 மணிநேரத்துக்குப் பின்னர் தமிழக வனத்துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் இருவரையும் கேரளா அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
Recommended Video

கோவையில் டென்ஷன்
இதனிடையே தமிழக வனத்துறை அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கோவையில் உள்ள மலையாள சமாஜம் முற்றுகையிடப்படும் என பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் கோவையில் தந்தை பெரியார் தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்பினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் கோவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications