காது கூசும் கெட்டவார்த்தை.. கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் அதகளம்.. என்னாச்சுனு பாருங்க
கோவை: காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபாலை வரவேற்பதற்காக நேற்று அந்தக் கட்சியினர் கோவை விமான நிலையம் சென்றனர். அப்போது கட்சியின் இரண்டு கோஷ்டிகளிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மாறி மாறி தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால். இவர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார். நேற்று கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.

அவரை வரவேற்க கோவை காங்கிரஸ் கமிட்டியினர் இரண்டு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றிருந்தனர். தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஐஎன்டியூசி தலைவர் கோவை செல்வன் தரப்பில் ஒரு கோஷ்டியும் சென்றிருந்தார்கள்.
கோவை காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மயூரா ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் கோவையில் காங்கிரஸ் கட்சி வளரும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த மோதல் காங்கிரஸ் தலைமை வரை சென்றும் தீர்ந்தபாடில்லை. வேணுகோபாலை வரவேற்க சென்ற இடத்திலும் மோதல் வெடித்துள்ளது. இரண்டு தரப்பினரும் வேணுகோபாலிடம் மாறி மாறி புகார் தெரிவித்துள்ளனர். அவர் முன்பே இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வேணுகோபால் இருவருக்கும் அறிவுரை சொல்லி கிளம்பிவிட்டார்.
வேணுகோபாலை வழியனுப்பிய பிறகு, விமான நிலையத்திற்கு வெளியே மோதல் தீவிரமடைந்துள்ளது. மயூரா ஜெயக்குமார் தரப்புக்கும், செல்வம் கோஷ்டி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி, இரண்டு தரப்பிலும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்குவதற்கு முயற்சித்தனர்.
இதைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து அனுப்பினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மயூரா ஜெயக்குமார் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் செல்வம் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார். அதேபோல செல்வம் தரப்பு மீது மயூரா ஜெயக்குமாரும் காவல்நிலையத்தில் புகாரளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications