15 தோட்டாக்கள் எங்கே? இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்.. அயோத்தி ரவி கைது!
கோவை: கோவை புலியகுளத்தில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் இருந்து 2 துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அயோத்தி ரவி மீது ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்திற்கு பின், காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்து முன்னணி கோவை மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர் அயோத்தி ரவி.
கோவை புலியகுளத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இருக்கும் அவரது வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி
இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் போலீசார் அயோத்தி ரவி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அயோத்தி ரவி வீட்டில்தான் இருந்திருக்கிறார். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 2 பிஸ்டல் ரக கைத் துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கிகள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து அயோத்தி ரவி வீட்டில் இருந்து கைத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அயோத்தி ரவியை போலீசார் போத்தனூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் இந்த துப்பாக்கிகளை எங்கிருந்து வாங்கியது? வாங்கி கொடுத்தது யார்? இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

15 தோட்டாக்கள் எங்கே?
இதன்பின்னர் அயோத்தி ரவி கைது செய்யப்பட்டார். அதேபோல் அயோத்தி ரவி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 துப்பாக்கிகளில் தலா 10 தோட்டாக்கள் என்று 20 தோட்டாக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவரிடம் 5 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன. எனவே மீதுமுள்ள 15 தோட்டாக்கள் எங்கே? அவற்றை அவர் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதத் தடை சட்டம்
இந்த துப்பாக்கிகளை அவர் நண்பர்கள் மூலம் சென்னையில் வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து, இந்து முன்னணியின் அயோத்தி ரவி மீது ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications