கோவை ஒண்டிபுதூரில் காலையிலே ஜேசிபியுடன் வந்த அதிகாரிகள்.. 1 கோடி மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்பு
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. கடந்த 25 வருடங்களில் கோவை மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தின் மதிப்பு தாருமாறாக உயர்ந்துள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தபடியே உள்ளது. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அரசுமீட்டு வருகிறது. அந்த வகையில் கோவை ஒண்டிபுதூரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.5 சென்ட் நிலம் மற்றும் பாதையை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கோவை மாநகரம் என்பது மற்ற மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் தொகையைவிடவும் மிக அதிகம். கோவை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் சுமார் 35 லட்சம் பேர் வசிக்கிறார்கள். மாநகராட்சி பகுதியில் மட்டுமே சுமார் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள். கோவை மாநகரம் கடந்த 2011ம் ஆண்டு தான் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதற்குள் அதன் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் மற்ற எந்த நகரமும் இப்படி வளரவில்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் அதிகமாக உள்ள நகரமாக கோவை திகழ்கிறது. கேராளவின் நுழைவு வாயிலாக கோவை, தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில், கேரளாவில் கல்லூரியில் போய் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர்களின் முதல் தேர்வாக கோவை உள்ளது. கல்லூரிகளின் நகரமாகவும் கோவை திகழ்கிறது. கோவையில் ஏராளமான சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி ஒருபுறம் எனில், நிலத்தின் மதிப்பும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆக்கிரமிப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளை சேர்ந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எந்தெந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்து மீட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை ஒண்டிப்புதூர் அருகே 56-வது வார்டுக்கு உட்பட்ட படக்கே வீதியில் பொதுக்கிணறு மற்றும் சாலை, 5.5 சென்ட் நிலம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அந்த ஆக்கிரமிப்பை அகற்ற அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதிக்கு நேரில் ஜேசிபி இயந்திரத்துடன் சென்றனர். பின்னர் அவர்கள் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலம் மற்றும் சாலை, பொதுக்கிணறு ஆகியவற்றை அதிரடியாக மீட்டனர். அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் இதுமாநகராட்சிக்கு சொந்தமான இடம், யாரும் ஆக்கிமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு சென்றார்கள். கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக்கிரமிப்பு நிலம் இருந்தால் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications