அதிமுகவில் பரபரக்கும் கோவை மேயர் பதவிக்கான போட்டி! கிருபாலினி Vs ஷர்மிளா! யார் கை ஓங்கும்?
கோவை: கோவையில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றால் யார் மேயராக வரக்கூடும் என்ற விவகாரத்தில் இப்போதே அக்கட்சியில் பனிப்போர் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
நேற்று வரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வலம் வரும் வடவள்ளி சந்திரசேகரின் மனைவியும், 38-வது வார்டு அதிமுக வேட்பாளருமான ஷர்மிளா தான் கோவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என அதிமுகவினர் பேசி வந்தனர்.
இந்நிலையில் அவருக்கு போட்டியாக கோவை மாநகராட்சி 7-வது வார்டு அதிமுக வேட்பாளர் கிருபாலினி தான் கோவையின் முதல் பெண் மேயர் என அவரது தரப்பினர் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது கோவை மாநகராட்சி. மொத்தம் உள்ள 100 வார்டுகளில் எந்தக் கட்சி அதிக மாமன்ற உறுப்பினர்களை பெறுகிறதோ அந்தக் கட்சியே மேயர் பதவியையும் கைபற்றக் கூடும். இந்நிலையில் அதிமுக அதிக இடங்களில் வெல்லும்பட்சத்தில் ஷர்மிளா சந்திரசேகர் தான் அக்கட்சியின் மேயர் வேட்பாளராக மறைமுகத் தேர்தலில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருபாலினி கார்த்திகேயன்
ஷர்மிளா சந்திரசேகருக்கு போட்டியாக அதிமுகவில் வேறு பெண் வேட்பாளர்கள் யாரும் மேயர் பதவிக்கு போட்டியிட முன்வரமாட்டார்கள் எனக் கருதப்பட்ட நிலையில், வந்துட்டேன்னு சொல்லு என்ற திரைப்பட வசனத்தை போல், கோவை மேயர் பதவிக்கான ரேஸில் 7-வது வார்டு அதிமுக வேட்பாளர் கிருபாலினியும் குதித்துள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகியாக இருக்கிறார்.

யாருக்கு வாய்ப்பு
வடவள்ளி சந்திரசேகரும் சரி, கார்த்திகேயனும் சரி இருவருமே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிருபாலினியின் கணவர் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பதால் கட்சிக்காக கணிசமான தொகையை கடந்த தேர்தலில் செலவழித்துள்ளாராம். இதனால் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றால் கிருபாலினி மேயராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உட்கட்சி உரசல்
திமுகவில் மீனா லோகு, இளஞ்செல்வி கார்த்திக், நிவேதா சேனாதிபதி என மூன்று பெண் வேட்பாளர்கள் மேயர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள்.இதனிடையே கோவையில் திமுகவை மிஞ்சும் அளவுக்கு அதிமுகவில் மேயர் பதவியை மையமாக வைத்து பனிப்போர் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. உட்கட்சி உரசல்களால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதை சரிசெய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications