கோவையில் திமுக முக்கிய நிர்வாகி வீட்டில் ஐ.டி ரெய்டு.. வீடு முழுவதும் சல்லடை போட்ட 10+ அதிகாரிகள்!
கோவை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மீனா லோகு வீட்டுக்கு 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு, அலுவலகம், கார் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் மீனா லோகு வீட்டில் இருந்து எந்தப் பொருளும் கைப்பற்றப் படவில்லை எனக் கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு, திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். கோவை மேயர் பதவிக்கான ரேஸிலும் இருந்தார் மீனா லோகு. திமுக முன்னணி நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் பைனான்ஸ் தொழில் செய்து வருவதுடன், அதிமுக ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications