Karur Tragedy: கரூருக்கு புறப்பட்ட ஹேமமாலினி கார் கோவையில் விபத்தில் சிக்கியது
கோவை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் தொடங்கி தேசியளவில் பல தலைவர்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கி ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்கள். இந்நிலையில் கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கரூரில் ஆய்வு மேற்கொள்ள கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்ற நிலையில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கரூர் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி வருகிறார்கள்.
மறுபக்கம் பாஜக கட்சி சார்பிலும் ஒரு குழு அமைத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிவிப்பில், பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஶ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கூட்ட நெரிசலுக்காக காரணத்தை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நட்டா உத்தரவிட்டிருந்தார். அதன்படி பாஜக குழு இன்று கரூர் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் கோவைக்கு விமானம் மூலம் இன்று வந்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் சாலை மார்க்கமாக கரூர் புறப்பட்டனர்.
கோவையில் இருந்து கரூர் கிளம்பிச் சென்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவினரின் கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் பாஜக நிர்வாகியின் காரின் முன்புற பகுதி சேதம். ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசான சேதமடைந்தது. யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் ஹேம மாலினி அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications